பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்துப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட ஆசிரியர் சங்கத்தினர் இன்று முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கின்றனர்.
எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இந்தப் பணிப்புறக்கணிப்பு தொடரும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
இன்று முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்துப் பரீட்சைகள் தொடர்பான நடவடிக்கைகள் உட்பட சகல பணிகளையும் தாம் நிறுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மீதான தாக்குதல் தொடர்பில் தேவையான பொலிஸ் முறைப்பாடுகளை மேற்கொள்ள பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிவிட்டது. அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய சில மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் நிர்வாகம் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறிவிட்டது” – என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே, மாணவர்கள் சட்டத்தைக் கையில் எடுப்பதைத் தடுப்பதற்கும், பல்கலைக்கழகச் சொத்துக்களைப் பாதுகாப்பது சம்பந்தப்பட்ட நிர்வாகங்களின் முன்னுரிமை கடமையாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தமது பணிநிறுத்தம் முதல் படியாக இருக்கும் என்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட ஆசிரியர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.