படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு, மேற்படி அதிகாரிகளை நேற்று அழைத்து முக்கியமான கலந்துரையாடலை நடத்தியதன் பின்னர் அவர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.
ஜனசக்தி குறூப் நிறுவனத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் படுகொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் படுகொலைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு அறிந்துகொண்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், பொலிஸ் விசேட செயலணியின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர, விசேட பணியகத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தனபால, குற்றத் தடுப்பு விசாரணைத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்க, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் நெவில் டி சில்வா மற்றும் அமைச்சின் இணைப்பு பொலிஸ் அத்தியட்சகர் சுமித் குணரட்ன உள்ளிட்ட துறைசார்ந்த முக்கிய அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.