கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி ஏழு மனித உரிமை அமைப்புகள் இணைந்து கூட்டறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளன.
சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய ஒன்றியம், மனித உரிமைகள் கண்காணிப்பகம், சோசலிச பாதுகாப்பு அமைப்பு, இலங்கை தொடர்பான சர்வதேச செயற்பாட்டுக்குழு, சமாதானம் மற்றும் நீதிக்கான இலங்கை குழு ஆகியன கூட்டாக இந்த அறிக்கையை வௌியிட்டுள்ளன.
வசந்த முதலிகே கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக அரசு இரத்துச் செய்வதாக உறுதியளித்த இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒரு கொடூரமான சட்டம் என்று கூட்டறிக்கையில் அவ்வமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனினும், இதுவரை அரசு குறித்த சட்டத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், ஊழல்மிக்க ஆட்சி முறைக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டத்துக்குப் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு அதிக அதிகாரங்களை வழங்கியதன் மூலமே அரசு பதிலளித்தது என்றும் அவ்வமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்தும் வசந்த முதலிகேவைத் தடுத்து வைக்க எந்தக் காரணமும் இல்லை என்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.