வர்த்தமானி அறிவித்தலையும் மீறி அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த 6 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா நுகர்வோர் அதிகார சபையினால் கிரிபத்கொடை, களனி மற்றும் மாகொல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 5 வர்த்தக நிலையங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதம் அபராதம் விதித்து மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்போது வர்த்தக உரிமையாளர் ஒருவர் நீதிமன்றில் ஆஜராகாமையால் சந்தேகநபரை கைது செய்வதற்கு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அதேவேளை, முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்த மற்றொரு வர்த்தக நிலையம் தனமல்வில பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டது. குறித்த வர்த்தக நிலையத்திற்கு வெல்லவாய நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
முட்டை விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கான புதிய வர்த்தமானி அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச விலை 44 ரூபாவாகவும், சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் காணப்பட்டது.
அதன்படி கட்டுப்பாட்டு விலையையும் மீறி அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் அண்மைகாலமாக நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.