செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை செம்மணியில் நீதி கோரி உறவுகள் போராட்டம் (படங்கள் இணைப்பு)

செம்மணியில் நீதி கோரி உறவுகள் போராட்டம் (படங்கள் இணைப்பு)

3 minutes read

யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரியும், மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் சர்வதேசக் கண்காணிப்புடனும், சர்வதேச நியமங்களைப் பின்பற்றியும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

யாழ். அரியாலை, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழியில் சிசுவின் எலும்புக்கூடு உட்பட 13 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தப் புதைகுழி பாரியதாக இருக்கலாம் எனப் பலரும் அச்சம் வெளியிட்டு வருகின்ற நிலையில், வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் செம்மணி வளைவுக்கு அருகில் செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரியும், புதைகுழி அகழ்வுப் பணிகள் சர்வதேசக் கண்காணிப்புடனும், சர்வதேச நியமங்களைப் பின்பற்றியும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“செம்மணிப் புதைகுழிக்கு நீதி வேண்டும், மறைக்காதே மறைக்காதே புதைகுழிகளை மறைக்காதே, எங்கே எங்கே உறவுகள் எங்கே, இனப்படுகொலைக்குச் சர்வதேச விசாரணை வேண்டும்” என எழுதப்பட்ட பல்வேறு பதாகைகளைப் தாங்கி நின்றவாறு போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

இதில் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தின் பின்னர் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கமாக, யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பாக எமது தீவிர கவனத்தையும், நிலைப்பாட்டையும் வெளியிடுகின்றோம்.

ஏற்கனவே தமிழர் தாயகப் பரப்பிலும் ஸ்ரீலங்காவிலும் 22 க்கும் மேற்பட்ட மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மன்னார் ச.தொ.ச. வளாக மனிதப் புதைகுழி, மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுகள் நிறைவு பெற்று மிக அண்மைய காலமாகத் தொடர்சியாக வழக்கு விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு இடம்பெற்று வருகின்றதே தவிர இந்த மனிதப் புதைகுழி தொடர்பான உண்மை இன்னும் உரிய வகையில் கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்படவில்லை. எனவேதான் நாங்கள் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்தவர்களாகத் தொடர்சியாக இவ்வாறாகக் கண்டுபிடிக்கப்பட்டு அகழப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச கண்காணிப்பையும், சர்வதேச நீதிப் பொறிமுறையையும் வலியுறுத்தி வருகின்றோம்.

தற்போது வரை செம்மணி சித்துப்பாத்தில் மீட்கப்பட்ட அல்லது அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் எண்ணிக்கை 13ஐத் தாண்டியுள்ளது. இதில் சிறு குழந்தைகளின் உடல எச்சங்களும் அடங்குவதாக அறிகின்றோம். மிகவும் கொடூரமான முறையில் ஒன்றன்மீது ஒன்றாகப் பலர் கொன்று புதைக்கப்பட்டிருப்பதாக இந்தப் புதைகுழி அகழ்வு வெளிப்படுத்துகின்றது.

ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் கண்டெடுக்கப்படும்போது, அந்த இடம் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப “மனிதப் புதைகுழி” என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம். எனவே, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான அகழ்விடத்தை உடனடியாக ஒரு “மனிதப் புதைகுழியாக” பிரகடனம் செய்யுமாறும், அதன் அடிப்படையில் அகழ்வுப் பணிகளை மேற்படி மயான வளாகம் முழுவதிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் விரிவுபடுத்துமாறும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

மேலும், செம்மணி முழுவதும் போர் இடம்பெற்ற கடந்த காலங்களில் பலர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக கிரிசாந்தி குமாரசாமி என்ற பாடசாலை சிறுமியின் கொலை தொடர்பான நீதிமன்றங்களில் இடம்பெற்ற வழக்குகளில் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆணைக்குழுக்களுக்கு அளிக்கப்பட்ட சாட்சியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த அகழ்வு நடவடிக்கை ஒரு தனிப்பட்ட சம்பவமாக அல்லாமல், பெரும் அளவிலான அடடூழியங்கள் இடம்பெற்ற தரவுகளை வெளிக்கொணரும் முக்கியமான வழியாக காணப்பட வேண்டும். செம்மணியின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு வெவ்வேறு மனிதப்புதைகுழிகள் இருக்கலாம் என நாங்கள் நம்புகின்றோம்.

ஆகவே,

1) செம்மணி சித்துப்பாத்தில் இடம்பெறும் அகழ்வு நடவடிக்கையை மனிதப் புதைகுழி விசாரணை என அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க கோருகின்றோம்.

2) அகழ்வுப் பணிகளைச் சர்வதேச நிபுணர்கள், சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையுடன், சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப முன்னெடுக்குமாறு கோருகின்றோம் .

3) மனிதப் புதைகுழி தொடர்பான அனைத்து ஆதாரங்களும் பாதுகாக்கப்பட்டு, வெளிப்படைதன்மையோடு அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுகின்றோம்.

4) மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கையை ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுதந்திரமாக மட்டுப்படுத்தல்கள் இன்றி அறிக்கையிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

5) எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வடக்குக்குப் பயணம் செய்து செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட்டு நீதியை நிலைநாட்டுவதற்கு உரிய பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா? வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை இவ்வாறு கண்டுபிடிக்கப்படும் மனிதப் புதைகுழிகள் தொடர்பாக விசாரணைகள் மூடி மறைப்புக்கள் இன்றி வெளிப்படைத்தன்மையோடு சர்வதேச சமூகத்தின் பங்கேற்போடு இடம்பெறும்போதுதான் வெளிப்படும் என நாங்கள் வலுவாக நம்புகின்றோம்.” – என்றுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.