இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்களில் ட்ரோன் முக்கிய இடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் புதிய ட்ரோனை பரிசாகப் பெற்றுள்ள இங்கிலாந்து மக்களில் பலர், புத்தாண்டு தொடங்கும் அடுத்த வாரம் ஒரு முக்கிய மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
ஜனவரி 1 முதல், பொதுவெளியில் ட்ரோன் அல்லது மாதிரி விமானங்களை பறக்க விடுவதற்கு முன் கட்டாயமாக theory test முடித்து, Flyer ID பெற வேண்டும்.
இதற்கு முன்பு 250 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட எடையுள்ள ட்ரோன்களுக்கு மட்டுமே இந்த அனுமதி தேவைப்பட்டது. ஆனால், புதிய விதிகளின் படி, 100 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட எடையுள்ள ட்ரோன் அல்லது மாதிரி விமானங்களை வெளியில் பறக்க விட விரும்புவோர் அனைவரும் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (Civil Aviation Authority – CAA) நடத்தும் ஆன்லைன் தியரி தேர்வை கட்டாயமாக எழுத வேண்டும்.
இந்தப் புதிய விதிகளால் இங்கிலாந்தில் சுமார் ஐந்து இலட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என CAA மதிப்பிட்டுள்ளது. ட்ரோன்கள் தற்போது “கிறிஸ்துமஸின் பொதுவான பரிசாக” மாறியுள்ளதால், மக்கள் சட்ட விதிகளை தெரிந்து பின்பற்றுவது அவசியம் என CAA பேச்சாளர் ஜோனாதன் நிக்கல்சன் தெரிவித்துள்ளார்.
“புதிய ட்ரோன் விதிமுறைகள் அமலுக்கு வருவதால், அனைத்து ட்ரோன் பயனர்களும் பதிவு செய்து, Flyer ID பெற்றுக்கொண்டு, விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் தங்கள் ட்ரோன்களை மகிழ்ச்சியுடன் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதே நேரத்தில், பாதுகாப்பாக எங்கு, எப்படி பறக்க விட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுவது மிக முக்கியம்” என அவர் கூறினார்.