செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா உதயநிதி ஸ்டாலின் அவதூறு பேச்சு, கைது விவகாரம் | பறக்கும் கண்டனங்கள்

உதயநிதி ஸ்டாலின் அவதூறு பேச்சு, கைது விவகாரம் | பறக்கும் கண்டனங்கள்

2 minutes read

தமிழக சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (4) கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சையில் தி.மு.கவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய் குறித்து முன்வைத்த விமர்சனக் கருத்துக்களை எதிர்த்து ஒருபுறம் சிலர் கண்டனம் தெரிவித்து வரும் அதேவேளை, உதயநிதி கைது செய்யப்பட்டதை எதிர்த்து இன்னொரு புறமும் சிலர் கண்டனக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் 

“எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொதுவெளியில் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்.”

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

“யாகாவாராயினும் நா காக்க” எனும் குறள் மொழியை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் உள்ள உதயநிதி கடைபிடிக்க வேண்டும். அதை விடுத்து முதலமைச்சர் மீது மலிவான இழிமொழிகளை வீசுவது அவர் வகித்து வரும் பொறுப்புக்கு உகந்தது அல்ல.

அரசுக்கு இடையூறு செய்வதற்கும் அரசியல் நடத்துவதற்கும் காவிரி பிரச்சினையை பயன்படுத்தி திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு, நாலாந்தர பேச்சாளர் பட்டியலில் அவரை சேர்த்திருக்கிறது என்பதை அவர் உணர வேண்டும்.”

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 

“நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள இந்த முக்கியமான நேரத்தில், ஒரு பொதுக்கூட்டத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வது ஜனநாயக உணர்வுக்கும் அரசியல் நாகரிகத்துக்கும் பொருந்தாத செயலாகும்.

ஜனநாயக மரபுகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் மதித்து, அரசியல் கருத்து வேறுபாடுகளை கைது நடவடிக்கைகள் மூலம் கையாளும் போக்கை அரசு கைவிட வேண்டும்.”

கனிமொழி எம்.பி

“எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது. நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்.”

சென்னை மேயர் பிரியா 

“தி.மு.க. தொண்டர்கள் மீது லத்திச்சார்ஜ் நடத்தும் அளவுக்கு நாங்கள் என்ன தீவிரவாதிகளா? தியேட்டருக்கு சென்று ‘ஜனநாயகன்’  படம் பார்த்து அழுகிறார்கள். ஆனால் இன்று பொலிஸாரை வைத்து ரத்தம் வரும் அளவுக்கு அடிக்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா? பொலிஸ்  உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய முடியாது. இந்த அராஜக அரசியலை கண்டு நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம்.”

பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான குஷ்பு

“தவறை ஒப்புக்கொண்டு திரிஷாவிடம் மன்னிப்பு கேட்கும் தைரியமும் கண்ணியமும் உதயநிதியிடம் உள்ளதா என்பதை பார்ப்போம்”

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 

“ஜனநாயகன் படத்தில் நடித்தாரே தவிர, ஜனநாயகம் பற்றி A,B,C அறியாதவராக விஜய் இருக்கிறார். தண்ணீர் வரவில்லை என்கிற வயிற்றெரிச்சலில் யாரோ ஒருவர் திரிஷா பெயரை கூறினார். அது என்ன உலக மகா தப்பா அது. தண்ணீர் என்பது குடிப்பது தானே. அதை நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது? திரிஷா பற்றி பேசினால் ஏன் இவ்வளவு அவசரம், திரிஷா என்ன பிரதமரா? முதல்வரா? எதற்காக இவ்வளவு அவசரம்? “திரிஷாவை விமர்சித்தால் கைது செய்வார்களா? மக்கள் பிரச்சினையை கவனிப்பதில் தவெக அரசுக்கு நேரமில்லை.

எதிர்க்கட்சியினரை கைது செய்ய முனைப்பு காட்டுகிறது. இப்படித்தான் கருணாநிதியை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இன்று அதே போல உதயநிதியை கைது செய்து வேனில் அழைத்து செல்கின்றனர். இன்று முதல் உதயநிதியை இளைய கலைஞர் என அழைப்பதற்கான வழியை விஜய் வகுத்துவிட்டார்.”

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.