ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரராக விருதை இலங்கையின் இளம் துடுப்பாட்ட வீரர் சொனால் தினூஷ தெரிவாகியுள்ளார்.
இதன் மூலம் தனது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே மதிப்புமிக்க விருதை சொனால் தினூஷ வென்றெடுத்து சாதித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் தனது அதிசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியமைக்காக சொனால் தினூஷ ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் ஒல்லி றொபின்சன் மற்றும் பங்களாதேஷின் ஹசன் மஹ்மூத் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சொனால் தினூஷ அசாத்திய திறமையை வெளிப்படுத்தியதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான்கு இன்னிங்ஸ்களில் மூன்று சதங்களை சொனால் தினூஷ குவித்தார்.
காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 25 வயதான இடதுகை துடுப்பாட்ட வீரரான சொனால் தினூஷ முதல் இன்னிங்ஸில் 100 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 84 ஓட்டங்களையும் பெற்றார்.
எனினும் அந்தப் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை 165 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை பலோ ஒன்னை எதிர்கொண்ட போதிலும் சொனால் தினூஷ இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்களைக் குவித்து போட்டியை வெற்றிதோல்வியின்றி முடிக்க உதவினார்.
முதல் இன்னிங்ஸில் 103 ஓட்டங்களைப் பெற்ற அவர் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காமல் 133 ஓட்டங்களைப் பெற்றார்.

சொனால் தினூஷ கருத்து
ஐசிசி விருதை வென்ற சொனால் தினூஷ, ‘எனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே கிடைத்த இந்த அங்கீகாரம் எனக்கு மிகவும் பெருமை அளிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான தொடர் என் இதயத்தில் எப்போதும் ஒரு தனி இடத்தைப் பிடிக்கும். மூன்று சதங்கள் அடித்தது ஒரு கனவு நனவான கதை போன்றது. கொழும்பிலும் காலியிலும் எமது சொந்த ரசிகர்களின் முன்னிலையில் சதங்கள் குவித்தது, அந்த கனவை மேலும் அர்த்தமுள்ளதாக்கியது’ என்றார்.
‘நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்காவிட்டாலும் இரண்டாவது போட்டியில் எங்கள் அணி மீண்டு வந்து போராடிய விதம், ஒரு அணியாக எங்களிடம் உள்ள குணத்தையும், நம்பிக்கையையும், உறுதியையும் வெளிப்படுத்தியது. அந்தப் போராட்டத்தை சக வீரர்களுடன் பகிர்ந்துகொண்டதில் நான் பெருமைப்படுகிறேன்.
‘இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாத ஒரு பாக்கியம். மேலும், தொடர்ந்து கற்றுக்கொள்ளவும், என்னை மேம்படுத்திக்கொள்ளவும், அணிக்கு பங்களிக்கவும் இந்த அங்கீகாரம் எனக்கு இன்னும் அதிக ஊக்கத்தை அளிக்கிறது. வருங்காலத்தில் இலங்கைக்காக எனது மிகச் சிறந்த பங்களிப்பைத் தொடர்ந்து வழங்குவேன்’ என அவர் மேலும் கூறினார்.
இதேவேளை ஆகஸ்ட் மாதத்தின் ஐசிசி சிறந்த வீராங்கனைக்கான விருதை ஐல் ஒவ் மான் அணித் தலைவி லூசி பார்னட் வென்றெடுத்தார்.
இந்த மாதம் மகளிர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற மூன்று பேரும் இணை அங்கத்துவ நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளாவர்.
தாய்லாந்து ஜோடியான சுலிபோம் லாஓமி மற்றும் நன்னாபத் கொன்ச்சாரோயென்காய் ஆகியோரே இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த மற்றைய இரண்டு வீராங்கனைகளாவர்.