தயாரிப்பு : கலாமாயா சினிவெர்ஸ்
நடிகர்கள் : கருணாஸ், நிமிஷா சஜயன், வை ஜி மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், பிரபு, ‘நிழல்கள்’ ரவி மற்றும் பலர்.
இயக்கம் : சஜீவ் பழூர்
மதிப்பீடு : 2.5/5
நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ என்ன விலை ‘. படத்தைப் பற்றி படக்குழுவினர்- ‘இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 21 ஆவது சட்டப் பிரிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்’ என்றனர். இத்தகைய முயற்சியில் படக்குழுவினர் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
இந்தியாவின் புனித தலமாக திகழும் ராமேஸ்வரத்தில் வாழும் மீனவரான தவசிமுத்து (கருணாஸ்) இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்து தங்களது பித்ரு காரியங்களை செய்து அக்னி தீர்த்தம் எனும் கடல் பகுதியில் வீசும் நாணயங்களை கடலுக்குள் மூழ்கி அதனை சேகரிப்பதை தன்னுடைய பகுதி நேர வாழ்வாதாரமாக கொண்டிருக்கிறார்.
இப்படி ஒரு முறை கடலுக்குள் மூழ்கி நாணயங்களை சேகரிக்கும் போது விலைமதிப்பற்ற தங்க ஆபரண நகையை கண்டெடுக்கிறார். அதை பார்த்தவுடன் விலைமதிப்பற்ற பொருள் என்பதை உணர்ந்து, அதனை தனக்கு உரிய பொருளாக கருதாமல் அந்த பகுதியை காவல் காக்கும் காவலரிடம் கொடுக்கிறார்.
அந்த பொருளை காவலர் தன்னுடைய சுயலாபத்திற்காக பாவித்து கொண்டு..சிக்கல் ஏற்ட்டவுடன் காவல்துறையினர் கருணாஸ் மீது திருட்டு பழியை சுமத்தி சிறையில் தள்ளுகிறார்.
அத்துடன் அவருக்கு பிணையும் மறுக்கப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு காஞ்சனா ( நிமிஷா சஜயன்)எனும் சட்டத்தரணி உதவ முன்வருகிறார். கருணாஸ் மீது சுமத்தப்பட்ட திருட்டு குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் அரசு தரப்பு உறுதிபடுத்த முடியவில்லை. ஆனால் விசாரணை நடைபெற்ற காலங்களில் தன்னுடைய சுய மதிப்பும் மரியாதையும் இழந்துவிட்டேன். அதற்கு இந்த அரசும், அரசியல் சட்டமும் பதிலளிக்க வேண்டும் என கருணாஸ் வழக்கு தொடுக்கிறார். இதற்கு அரசும், நீதிமன்றமும் பதிலளித்ததா? இல்லையா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.
காவல் துறை – அரசாங்க சட்டத்தரணி – நீதிமன்ற நடவடிக்கைகள் – ஊடகங்கள் – ஆகியவற்றாவ் சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படும் சாதாரண மனிதன் – தன் சுய மரியாதையை மீட்டெடுப்பதற்காக நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் கோரிக்கைகள் முழுமையானதாக இல்லை. ஊடகங்கள் தான் தன் சுய கௌரவத்திற்கு ஊறு விளைவித்தது என்பது போல் அவரது கோரிக்கைகள் இருக்கிறது. அத்துடன் ஒரு மாநிலத்தின் முதல்வரின் அறிவிப்பும், ஆலோசனையும் எப்படி நீதிமன்ற தீர்ப்பாகும்?
சாதாரணமான மனிதனின் மானத்திற்கு என்ன விலை? என்று வினா எழுப்புவது எளிதாக இருந்தாலும்.. அதற்காக இயங்குநர் முன்மொழிந்திருக்கும் கருத்தியல் முழுமையற்ற தீர்வாகவும், இடைக்கால நிவாரணமாகவுமே இருப்பதால்… என்ன விலை? பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
படைப்பாக முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் விறுவிறுப்பு இருந்தாலும் பார்வையாளர்களுக்கான திரையரங்க அனுபவம் என்பது மிக மிக குறைவு தான்.
தவசிமுத்து என்ற கதாபாத்திரத்தில் கருணாஸ் ஆங்காங்கே சிறப்பாக நடித்திருக்கிறார்.
சட்டத்தரணி காஞ்சனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகை நிமிஷா சஜயன் இயக்குநர் சொன்னதை மட்டும் செய்திருக்கிறார்.
அந்த விலை மதிப்பற்ற பொருளின் பின்னணியை விவரித்திருப்பது சுவாரசியமானதாக இருக்கிறது.
ஒளிப்பதிவு , பின்னணி இசை ஆகியவை சிறப்பாக இருக்கிறது.
என்ன விலை..?- ஒரு மதிப்பெண்ணிற்கான கேள்வி.