தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களுள் தற்போது மிக பிஸியாக இருக்கும் நடிகர் யோகிபாபு. இவர் தர்மபிரபு, கூர்கா போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் பட்லர் பாலு என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியானது.
இதற்கு யோகிபாபு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக புகார் ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
அந்த புகார் அறிக்கையில், நான் தர்மபிரபு, கூர்கா போன்ற படங்களில் மட்டுமே கதையின் நாயகனாக நடித்தேன். அதைத் தொடர்ந்து பல படங்களில் காமெடியனாக மட்டுமே நடித்து வருகிறேன்.
இந்நிலையில் பட்லர் பாலு என்ற படத்தில் யோகிபாபு நாயகனாக நடிப்பதாக செய்திகள் வெளியாகின. அத்துடன் எனக்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனத்தை எஸ்.பி. ராஜ்குமார் எழுதிக் கொடுக்கிறார் என்றும் செய்திகள் பரவி வருகின்றன.
ஆனால், பட்லர் பாலு படத்தில் சிறு நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் 8 வருடங்களுக்கு முன்னர் வெறும் 4 நாட்கள் மட்டுமே நடித்தேன். தற்போது அப்படத்தின் நாயகன் என செய்தி வெளியிட்டுள்ளனர். இதில் துளியும் உண்மை இல்லை.
எனக்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை, யாரும் எழுதித் தருவதில்லை. இயக்குநர் தரும் வசனங்களை, என் ஸ்டைலுக்கு ஏற்றவாறு மாற்றிப் பேசுகிறேன். நகைச்சுவை கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து, மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே என் ஆசை என தெரிவித்தார்.