மாநகரம் படத்தில் அறிமுகமாகி பின்னர் கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மீண்டும் கார்த்தியுடன் இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு இன்னமும் முடிவடையாததால் அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு பிறகு தான் ரஜினி – லோகேஷ் கனகராஜ் படம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இந்த இடைவேளையில், லோகேஷ் கார்த்தியை வைத்து வேறு ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறாராம். இந்த படத்தையும் கைதி படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.