Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி மூத்த நடிகர் ஸ்ரீகாந்தின் திரைப்பயணம்

மூத்த நடிகர் ஸ்ரீகாந்தின் திரைப்பயணம்

4 minutes read

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக் குறைவால் காலமானார்.

இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான ‘வெண்ணிற ஆடை’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். 

‘பாமா விஜயம்’, ‘எதிர்நீச்சல்’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். 

இவர் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். 

சிவக்குமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

திரைப்படங்களில் நடிகராக அறிமுகமாவதற்கு முன் ‘மேஜர் சந்திரகாந்த்’ உள்ளிட்ட ஏராளமான மேடை நாடகங்களில் ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார். இவர் ‘குடும்பம்’ என்ற சின்னத்திரை தொடரிலும் நடித்திருக்கிறார். 

81 வயதாகும் நடிகர் ஸ்ரீகாந்த்திற்கு மகள் ஒருவர் இருக்கிறார். அவர் அமெரிக்காவில் வசித்துவருகிறார். இந்நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக அவர் நேற்று காலமானார்.

இவருக்கு திரை உலகின் மூத்த நடிகர்களான சிவக்குமார், ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

திரையுலகில் நுழையும் முன் அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்தார்.

இவர் நிறைய படங்களில் சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் போன்ற நடிகர்களோடு துணைப் பாத்திரங்களில் நடித்தார்.

பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களோடு எதிர்நாயகனாகத் தோன்றினார்.

ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படமான பைரவியில் முதன்மை எதிர்நாயகனாக நடித்தது இவரேயாவார்.

இவர் கதை நாயகனாக நடித்து 1974 இல் வெளிவந்த திக்கற்ற பார்வதி திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது.

ஸ்ரீகாந்த்தின் தந்தை பெயர் ராஜாவெங்கட்ராமன். 1940.03.19 அன்று தமிழ்நாடு ஈரோட்டில் பிறந்தவர் ஸ்ரீகாந்த்.

ஸ்ரீகாந்த் தமிழில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் கதாநாயகனாக நடித்த படங்கள் 50.

சில குறிப்பிடத்தக்க திரைப்படங்களான வெண்ணிற ஆடை (1965), நாணல் (1965), ராஜபார்ட் ரங்கதுரை (1973), அன்புத்தங்கை (1974), திக்கற்ற பார்வதி, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள், வைரம் (1974), வெள்ளிக்கிழமை விரதம், ராஜநாகம், ஞான ஒளியில், வசந்தமாளிகை, அவள், காசேதான் கடவுளடா, காசியாத்திரை, அவன் ஒரு சரித்திரம், அன்னப்பறவை, சட்டம் என் கையில், நீயா?, தங்கப்பதக்கம் (1975), பைரவி (1978), நூற்றுக்கு நூறு, காதல் கொண்டேன் (2003) போன்றவையாகும்.

ஸ்ரீகாந்த் நடித்த வேடங்களில் மறக்கமுடியாதது தங்கப்பதக்கம் “ஜெகன்” கதாபாத்திரம்.

தந்தையான நேர்மை நிறைந்த பொலிஸ் அதிகாரி எஸ்.பி.சௌத்ரியான சிவாஜிகணேசன் அவர்கள் தன் மகனை மிஸ்டர் ஜெகன் என்றே பல காட்சிகளில் அழைப்பார். மகனும் தன் தந்தையை தனக்கு எதிரியாக பாவித்த பிறகு தனது தந்தையை எஸ்.பி.சௌத்ரி என்றே அழைப்பார்.

தமிழ்த் திரையுலகில் மகனானவன் தனது தந்தையையே எதிரியாக பாவித்து வளர்பவனாக இந்தப் படத்தில்தான் முதன்முதலாக நாம் கண்டிருக்க முடியும்.

ஜெகன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஸ்ரீகாந்தின் நடிப்பானது படம் பார்க்கும் இரசிகர்களையே அந்தக் கதாபாத்திரத்தின் மீதே கோபம் கொள்ளும் அளவிற்கு மிகப் பிரமாதமாக நடித்திருப்பார்.

சிவாஜியும், ஸ்ரீகாந்த்தும் இணைந்த காட்சிகள் அனைத்தும் இப்பொழுது பார்த்தாலும் சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கும். சிவாஜிக்கும் ஸ்ரீகாந்துக்கும் சம பலத்தோடு வசனங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

இயக்குனர் மகேந்திரன் அவர்களின் வசனம் காட்சியின் பலத்தை பல மடங்கு கூட்டியிருக்கும். இந்தப் படத்துக்குப் பிறகு இவர் நாயகனாக நடித்து வெளிவந்த “ராஜநாகம்” திரைப்படம் பலருடைய பாராட்டுப் பெற்ற திரைப்படமாக அமைந்தது.

இப்படத்தில் இவர் ஏற்ற ”கிருஷ்ணமூர்த்தி” பாத்திரம் அருமை. ஸ்ரீகாந்த் அறிமுகமான வெண்ணிற ஆடை திரைப்படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினை பெற்றார்.

வெண்ணிற ஆடை படத்தில் தான் ஸ்ரீகாந்த்,ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா,வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றோர் தமிழில் அறிமுகமானார்கள்.

இப்படத்தில் “கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல”என்ற பாடலில் ஜெயலலிதாவின் நடனத்திற்கு ஸ்ரீகாந்த் நடக்கும் ஸ்டைல் அருமை.

இவருடைய பின்புறத்தில் கெமரா இருக்கும், இவருக்கு முன்பு ஜெயலலிதா நடனமாடியபடி செல்வார். பிரமாதமான பாடல் காட்சியது.

ஒவ்வொரு ஃபிலிமிலும் இரசனை உணர்ச்சி தழும்பி நிற்கும். ஜெயகாந்தனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்” ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் “நாவலைப் படித்து விட்டு படத்தையும் பார்த்தால், அப்படியே நாவலில் படித்த உணர்வை இவருடைய நடிப்பில் உணரமுடியும்.

நாவலின் கதாபாத்திரத்தை கனகச்சிதமா நம் கண்முன்னே நடமாட விட்டிருப்பார் ஸ்ரீகாந்த்.

மிகவும் யதார்த்தமான, இயல்பான நடிப்பு இவருடையது. பைரவி திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தாலும் ரஜினி பெயருக்கு முன்பாக இவருடைய பெயர்தான் டைட்டில் கார்டில் முதன்மையாக இடம் பெற்றிருக்கும். அந்த அளவிற்கு இவர் அன்றைக்கு புகழோடு இருந்தார்.

எழுத்தாளர் ஜெயகாந்தன், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், கவிஞர் வாலி, சோ, நாகேஷ், போன்றோர் இவருடைய நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,கர்மவீரர் காமராஜர் போன்றோர் மீது ஸ்ரீகாந்த் அளவு கடந்த பற்று கொண்டவர்.

மக்கள் திலகம் எம்ஜியாருடன் ஸ்ரீகாந்த் இறுதி வரை ஒரு படத்திலேனும் நடிக்கவில்லை. எனினும் இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது.

இலங்கையில் தயாரித்த “நெஞ்சுக்கு நீதி” படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ளார். அனைவரிடமும் இயல்பாக பழகக்கூடியவர் ஸ்ரீகாந்த்.

12.10.2021 அன்று சென்னையில் தனது 81ஆவது அகவையில் காலமானார். தமிழ் என்றும் மறக்க முடியாத ஓர் பன்முகம் கலைஞர் திரு ஸ்ரீகாந்த்.

எஸ்.கணேசன் ஆச்சாரி 

சதீஷ் கம்பளை இலங்கை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More