தேவையானவை:
நடுத்தர சைஸ் காலிஃப்ளவர் – ஒன்று
உப்பு – தேவையான அளவு
ஊறவைக்க:
தயிர் – அரை கப் (துணியில் கட்டி தொங்கவிட்டுத் தண்ணீரை வடிகட்டவும்)
கடலை மாவு – 3 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
காஷ்மீர் மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள், கரம் மசாலாத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
கசூரி மேத்தி (உலர் வெந்தயக்கீரை) – ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அவனை (oven) ப்ரீஹீட் செய்யவும். பேக்கிங் பாத்திரத்தில் வெண்ணெய் தடவவும். ஊறவைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். காலிஃப்ளவரை இலைகள் நீக்கி, நன்கு கழுவி, பேப்பர் டவல்கொண்டு ஈரத்தை ஒத்தி எடுக்கவும். கட்டிங் போர்டில் காலிஃப்ளவரைத் தலைகீழாக வைக்கவும். கூர்மையான கத்தியால் `V’ போல கட் செய்து நடுத்தண்டை நீக்கவும் (மிகவும் ஆழமாக கட் செய்யக் கூடாது; பூக்கள் தனித் தனியாகப் பிரிந்துவிடக் கூடாது).
இந்த காலிஃப்ளவரை பேக்கிங் பாத்திரத்தில் நேராக நிமிர்த்தி வைக்க முடியும். காலிஃப்ளவர்மீது பிரஷ்ஷால் நெய் தடவி, மேலே பரவலாக உப்பு தூவவும். அதன்மீது ஊறவைத்த தயிர்க்கலவையைத் தடவவும். காலிஃப்ளவரை பேக்கிங் பாத்திரத்தில் வைத்து, பாத்திரத்தை அவன் உள்வைத்து, 180 டிகிரி செல்ஷியஸில் 45 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுக்கவும் (வெந்துவிட்டதா என்று கத்தியைச் செருகி, சோதித்துப் பார்த்துப் பிறகு வெளியே எடுக்கவும்). ஐந்து நிமிடங்கள் கழித்து சாதம், கிரேவியுடன் பரிமாறவும்.
நன்றி -தினகரன்