சட்டவிரோத வேலைகளைக் கையாள்வதை நோக்கமாகக் கொண்ட புதிய டிஜிட்டல் அடையாள அட்டை (digital ID) திட்டத்திற்கான திட்டங்களை இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலண்டனில் நடந்த ஒரு மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் ஸ்டார்மர், இந்தத் திட்டத்தின்படி, இங்கிலாந்தில் டிஜிட்டல் அடையாள அட்டை இல்லாமல் எவராலும் பணி செய்ய முடியாது என்று உறுதியாகக் கூறினார்.
இந்தத் திட்டம் நாட்டின் எல்லைகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
இத்திட்டத்தின் படி, இங்கிலாந்தில் பணிபுரிய விரும்பும் உழைக்கும் வயதிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டைகள் கட்டாயமாக்கப்படும்.
இந்த டிஜிட்டல் அடையாள அட்டையில் ஒரு நபரின் பெயர், பிறந்த திகதி, குடியுரிமை அல்லது வதிவிட நிலை மற்றும் ஒரு புகைப்படம் ஆகியவை அடங்கும்.
நீங்கள் ஒரு வேலையில் சேரும்போது அல்லது ஒரு வீட்டு உரிமையாளருடன் வாடகை ஒப்பந்தம் செய்யும்போது, இங்கிலாந்தின் சட்டப்பூர்வமாக வாழவும் வேலை செய்யவும் உங்களுக்கு உரிமை உண்டு என்பதை நிரூபிக்க இந்த அடையாள அட்டையை வழங்க வேண்டும்.
இருப்பினும், நீங்கள் அதை வழக்கமான அடிப்படையில் வேலையில் சமர்ப்பிக்க வேண்டியதில்லை அல்லது அதைச் சுற்றி எடுத்துச் செல்ல வேண்டியதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த அடையாள அட்டை, ஸ்மார்ட்போனில் வைக்கப்படும்—இது காண்டாக்ட்லெஸ் கார்டுகள் (contactless cards) போன்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்தத் திட்டம் தனிப்பட்ட தரவுகளை ஒப்படைக்க மக்களை கட்டாயப்படுத்தும் என்று அஞ்சுவதாக லிபரல் டெமாக்ரட்ஸ் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதனால் சுமார் 700,000 க்கும் மேற்பட்டோர் இதற்கு எதிராக மனுவில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் அடையாள அட்டைகள் குறித்த பல கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை. உதாரணமாக, அடையாள அட்டையில் முகவரி சேர்க்கப்படுமா அல்லது பாலினம் சேர்க்கப்படுமா என்பது குறித்து அரசாங்கம் ஆலோசனை நடத்த உள்ளது. இந்த ஆலோசனை விரைவில் தொடங்கப்படும் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.