கரூரில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 39பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நேற்று சனிக்கிழமை (27) கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் மயக்கமடைந்துள்ளனர்.
பிரதமர் மோடி வருத்தம்
பாதிக்கப்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துவமனை மட்டுமல்லாது, ஒரு தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன என கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்
இந்தச் சம்பவம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள விஜய், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். உயிரிழந்த சகோதர, சகோதரிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
விஜய் கைதுசெய்யப்படுவாரா?
விஜய் கைது செய்யப்படுவாரா? என்று செய்தியாளர் ஒருவர் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அதற்கு தான் உயர்நீதிமன்றத்தினுடைய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படிருக்கிறது. அந்த ஆணையம் விசாரித்து முழுமையாக சொல்லும். இதற்கிடையில், நீங்கள் கேட்பது போல அரசியல் நோக்கத்தோடு எதையும் நான் சொல்ல விரும்பவில்லை. மீண்டும்மீண்டும் இதை தான் சொல்லப் போகிறேன். ஆணையம் அதற்காக தான் அமைத்திருக்கிறோம். ஆணையத்தின் மூலம் உண்மை வெளிவரும். உண்மை வெளி வரும்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.