2029ஆம் ஆண்டுக்குள், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படும் என்று உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் உறுதியளித்துள்ளார்.
ஒரு தசாப்தத்திற்குள் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை பாதியாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆன்லைனில் செயல்படும் இரகசிய பொலிஸ் பிரிவுகளுக்கான கூடுதல் நிதி, உள்நாட்டு துஷ்பிரயோக பாதுகாப்பு உத்தரவுகளை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
பலமுறை தள்ளிவைக்கப்பட்ட பின்னர், இந்தத் திட்டம், எதிர்வரும் வியாழக்கிழமை வெளியிடப்படவுள்ளது.
இந்த நடவடிக்கைகள் குறித்து மஹ்மூத் கூறுகையில், “துஷ்பிரயோகம் செய்பவர்களை கட்டுப்படுத்தி, அவர்களைத் தடுப்பதற்காகவே இவை. பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கும் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கும் இனி எங்கும் ஒளிந்துகொள்ள முடியாது” என்றார்.
புதிய சிறப்பு குழுக்களில், வன்புணர்வு மற்றும் பாலியல் குற்ற வழக்குகளை கையாள தேவையான மேம்பட்ட புலனாய்வுத் திறன்களைக் கொண்ட அதிகாரிகள் பணியமர்த்தப்படுவார்கள். தற்போது 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பொலிஸில் இத்தகைய குழுக்கள் இருந்தாலும், 2029க்குள் அனைத்துக் பொலிஸ் நிலையங்களிலும் அர்ப்பணிப்புடன் செயல்படும் அதிகாரிகள் இருப்பார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களும் துஷ்பிரயோகம் செய்பவர்களும் எதிர்கொள்ளும் மனநிலையை புரிந்துகொள்ள பொலிஸாருக்கு சிறப்புப் பயிற்சியும் வழங்கப்படும்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை அரசு “தேசிய அவசரநிலை” என அறிவித்துள்ளதாகவும், நீண்ட காலமாக சமூகத்தில் இயல்பான ஒன்றாகக் கருதப்பட்ட இந்தக் குற்றங்களை, இனி ஏற்க முடியாது என்றும் மஹ்மூத் கூறினார். “ஒரு தசாப்தத்தில் இதை பாதியாகக் குறைப்போம்” என்றும் அவர் வலியுறுத்தினார்.