போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப் திரட்டிய தகவல்களை தமக்கு வழங்க வேண்டும் என்று பாதுகாப்புச் செயலர் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ள அமெரிக்கா, குற்றமிழைத்தவர்களைக் கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சுதந்திரமானதும், நம்பகமானதுமான ஒரு விசாரணை நடக்க வேண்டும் என்று அமெரிக்கா உண்மையாகவே விரும்பினால், தூதுவர் ஸ்ரீபன் ராப் எங்கிருந்து தகவல்களைத் திரட்டினார் என்ற விபரங்களை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் ஜுலியான் ஏ ஸ்பவன் இது குறித்துத் தெரிவிக்கையில், நாடு முழுவதிலும் உள்ள பல தரப்பட்டவர்களுடனும், அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பரந்துபட்ட அளவில் தொடர்ச்சியான சந்திப்புகளை மேற்கொள்கின்றனர். நாம் அந்தச் சந்திப்புகளை வகைப்படுத்துவதில்லை.
தூதுவர் ஸ்ரீபன் ராப்பின் அறிக்கை அவரது சார்பிலானது. போரின் இறு திக்கட்டத்தில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்த சாட்சியங்களை நேரில் சந்தித்து விபரங்களைப் பெறும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. சுதந்திரமான – நம்பகமான விசாரணைகளின் மூலம் இலங்கை உண்மையை கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட வர்களைத் தண்டிக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.
ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவுக்குத் தகவல் தெரிவித்தவர்களின் அடிப்படையில், அமெரிக்கா சாட்சிகளிடம் தகவல் திரட்டியதா என்று அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு, அவ்வாறு தம்மால் வகைப்படுத்திக் கூற முடியாது என்றார் அவர்.