காணாமல் போனோரைக் கண்டறிவதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற விசாரணைகளுக்குச் சென்ற காணாமல்போனவர்களின் உறவுகளை இராணுவப் புலனாய்வாளர்கள், காணாமல் போனவர்களை மரணமடைந்தவர்களாகக் கருதி மரணச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்தித்துள்ளதாக உறவுகளில் சிலர் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.
இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் போனோரைக் கண்டறிவதற்காக ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவினர் கடந்த மூன்று நாட்களாக கிளிநொச்சியில் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த விசாரணைகளுக்குச் சென்ற காணாமல் போனவர்களின் உறவுகளை இப்பதிவுகள் நடைபெற்ற நிலையங்களுக்கு வெளியில் காத்திருந்த அரசாங்க ஆதரவாளர்களும், இராணுவப் புலனாய்வாளர்களும் காணாமல் போனவர்களை மரணமடைந்தவர்களாக் கருதி மரணச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்தித்துள்ளனர்.
இத்தகைய பதிவுகளை மேற்கொண்டவர்களுக்கு இரணைமடுவில் வைத்து ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளையும் வழங்கியுள்ளனர்.
மேலும், இவ்வாறு மரணச்சான்றிதழ்களைப் பெறுகின்றவர்களுக்கு பணமும் வேறுவகையான உதவிப் பொருட்களையும் பெற்றுத்தருவதாகவும் அவர்கள் வாக்குறுதியளித்துள்ளனர். சிலரை நிர்ப்பந்தித்துமுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக காணாமல் போனோரின் உறவினர்கள் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை தேடியலைகின்ற நிலையில் சிலர் இத்தகைய ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றமை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார்.