கடந்த காலங்களில் தமிழ் மக்கள் அனுபவித்துவந்த துன்பதுயரங்களிலிருந்து படிப்படியாக விடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் தமிழர்களின் கல்விச் செயற்பாடுகளைக் கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும் என வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
ஏசியா பவுண்டேசன் நிறுவனத்தின் 60 ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான 284 நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு நேற்று முன்தினம்காலை யாழ்.பொது நூலக சிறுவர் பிரிவில் நடைபெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,
யாழ்.நூலகத்துக்கு ஏசியா பவுண்டேசனால் நூல்களை அன்பளிப்புச் செய்ததையிட்டு நான் மகிழ்வுறுகின்றேன். இந்நூலகத்தின் கட்டுமானத்திற்கு 1954 இல் ஏசியா பவுண்டேசன் முதலில் வழங்கிய உதவிக்கு நாங்கள் கடப்பாடுடையவர்கள் ஆகின்றோம்.
கிழக்கிலேயே 95,000 நூல்களைக் கொண்டு முதலாவதாக விளங்கிய காலமொன்றுண்டு. ஆனால் 1981 இல் சமூகப் பிரிவினை, இனப்பிரிவு ஆகிய பலி பீடத்தில் அவற்றை நாம் பலி கொடுத்துவிட்டோம். யாழ்.தீபகற்பத்தில் சாவகச்சேரியில் நான் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றினேன். ஒருநாள் விடிகாலையில் யாழ். நூல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டுவிட்டது என்ற சாவகச்சேரி காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி அசோகா தென்னக்கோனின் தொலைபேசித் தகவலால் துகிலெழும்பினேன். யாழ்.நூலகத்துக்கு அண்மையில் வாசம் செய்த அந்நாள் அரசின் மூத்த அமைச்சரின் பால் அவரது விரல் சுட்டிக்காட்டப்பட்டது. குடிபோதையிலிருந்த சிங்கள இராணுவத்தினர் சிலரை அவர் தூண்டியதாகச் சொன்னார். இத்தகவலைக் கேள்விப்பட்ட 16 மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்த அருட்தந்தை டேவிட் அந்த இடத்திலேயே வீழ்ந்து மரணமானார்.
முதல்நாள் மாலையில் அங்குவிடப்பட்ட அவரது முற்றுப்பெறாத ஆய்வுகட்டுரை முற்றுமுழுதாகத் தீக்கிரையானது.
அண்மைக் காலத்தில் நாம் அனுபவித்த துயரிலிருந்து சிறிது சிறிதாக வெளிவந்து கொண்டிருக்கின்றோம். காலஞ்சென்ற அமைச்சர் லக் ஷ்மன் கதிர்காமர் அமைச்சராக வீற்றிருந்தபோது ஏசியா பவுண்டேசன் அவருடன் நெருக்கமாக இருந்து பொதுநூலகத்தின் புதுப்பித்தலுக்குக் கை கொடுத்தது.எங்களது இதுவரைகால இழப்புக்களை நிறைவாக்க மீண்டும் ஏசியா பவுண்டேசன் முன்வந்துள்ளமை அதிஷ்டகரமானதாகும். இச்சிறப்புத் தகுதிக்கான 60 ஆம் ஆண்டு காலத்தில் பொறுப்புரிமையாளர் குழுவின் வரவும் தெம்பூட்டுவதாகும். தமிழில் எழுத்தறிவித்தவன் தெய்வ மாவான் என்ற பழ மொழி யுண்டு.புத்தகங்களைக் கையளிப்பதற்காக ஏசியா பவுண்டேசனிலிருந்து மைக்கல் ஆர்மகோஸ்ற்றும், டேவிட் ஆர்னோல்ட்டும் சமுகமளித்துள்ளமை மகிழ்வூட்டுகின்றது. குழுவின் தலைவரான ஆர்மகோஸ்ற் இயக்குநர் குழுவின் அங்கத்தவருமாகும்.
ஏசியா பவுண்டேசனின் தலைவர் டேவிட் ஆர்னோல்ட் வருகைதந்ததற்காக நன்றியறிதலுடையவராவோம் என்றார்.
இந்நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, மாநகர ஆணையாளர் செ.பிரணவநாதன், ஏசியன் பவுண்டேசனின் தலைவர் டேவிட் ஆர்னோல்ட், இலங்கைப் பிரதிநிதி டினோசா விக்கிரமநாயக்க, யாழ்.பொதுநூலக பிரதம நூலகர் மெல்டா கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.