இன்று லண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) யினால் ஒழுங்கு செய்த மாபெரும் பொங்கல் விழாவும் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பும் நடைபெற்றது.
இதில் தாயகத்தில் இருந்து வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன், சுரேஷ் பிரேமசந்திரன், அரியநேந்திரன் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் மலேசிய பினாங்கு மாநில துணை முதல்வர் திரு.ராமசாமி, ஈழம் சென்றவேளை நாடுகடத்தப்பட்ட மகாதமிழ் பிரபாகரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் அரசு, தமிழர்களின் நிலங்களை அபகரித்து வருவதை எதிர்த்து பிரித்தானிய தமிழர் பேரவையினால் நடாத்திய மாபெரும் மாநாடு கடந்த இரண்டு தினங்களாக லண்டனில் நடைபெற்றுள்ளது. அதன் ஒரு அங்கமாகவே இன்றைய தினம் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் பேசுகையில் “பறிபோகின்ற நிலங்களை பாதுகாக்கின்ற நடவடிக்கையில் நாம் எமது மொழியினை பாதுகாத்து பேணவேண்டும், தமிழ் என்ற சொல்லைக்கூட ரமில் என்றுதானே சொல்ல முயற்சிக்கின்றோம். அதற்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிய இன்றுவரை ஆராய்ந்துகொண்டு இருக்கின்றோமே அன்றி முடிவுகளை எடுக்கமுடியவில்லை. புலம்பெயர் நாடுகளில் தமிழில் கதைப்பது குறைந்து வருகின்றது குறிப்பாக நோர்வே மற்றும் ஜேர்மனியில் எல்லோரும் நன்றாகவும் அழகாகவும் தமிழில் கதைக்கின்றார்கள் அதேபோன்று அனைத்து புலம்பெயர் நாடுகளிலும் இருக்கும் தமிழர்கள் நன்று தமிழில் பேசவேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இன்றைய நிகழ்வில் பல்வேறுபட்ட தமிழர் கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றன.