Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கழுத்தில் பாம்புடன் அம்மன் அவதாரம் என்ற பெண் சாமியாரை சிக்கவைத்த யூடியூப் வீடியோ

கழுத்தில் பாம்புடன் அம்மன் அவதாரம் என்ற பெண் சாமியாரை சிக்கவைத்த யூடியூப் வீடியோ

3 minutes read
பெண் சாமியார் கபிலா
பெண் சாமியார் கபிலா
`உங்க பேரில் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கிவிடலாம். அதில் கோயில் தொடர்பான பரபரப்பு வீடியோக்களைப் போட்டால், பக்தர்கள் அதிக அளவு வருவார்கள்’ என ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். பிறகு, யூடியூபில் அந்த வீடீயோக்களை பதிவேற்றம் செய்தனர்.

பாம்புக்குப் பாலாபிஷேகம் செய்த வீடியோவை ஒரு வருடம் கழித்து யூடியூபில் பதிவேற்றம் செய்த காஞ்சிபுரம் பெண் சாமியார் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெண் சாமியார் கபிலா
பெண் சாமியார் கபிலா

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் உள்ள வெள்ளரி அம்மன் கோயிலில் அருள் வாக்கு சொல்லிவரும் பெண் சாமியார் கபிலா. இவர் கடந்த 4.2.2018-ல் கோயில் குப்பாபிஷேகத்தின் போது இரண்டு பாம்புகளை வாடகைக்கு வரவழைத்தார். அருள்வாக்கு சொல்லி நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறி கோயிலில் `சர்ப்ப சாந்தி பூஜை’ என்னும் நாக பூஜை செய்தார். அந்தப் பாம்புகளைத் தட்டுகளில் வைத்து மலர் தூவி தீபாராதனை செய்தும், பாம்புக்குப் பாலாபிஷேகமும் செய்து வைத்தார். அதோடு நிற்காமல் கோயிலில் உள்ள அம்மன் சிலையின் மீது பாம்புகளைவிட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜை முடிந்த கையோடு அந்தப் பாம்பாட்டி உதவியுடன் அந்தப் பாம்பைக் கழுத்தில் அணிந்துகொள்கிறார். அம்மன் அருள் கிடைத்தவரைப் போன்று பாவனை செய்து பக்தர்களை உணர்ச்சிக் கொந்தளிப்பில் பரவசப்படுத்துகிறார் கபிலா.

கழுத்தில் பாம்புடன் அம்மன் அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்த கபிலா, கையில் சூலம், கழுத்தில் எலுமிச்சை மாலை என காளியாகத் தாண்டவமாடினார். இதைக் கண்டு அச்சத்தில் உறைந்துபோனார்கள் பக்தர்கள். மேலும், இவற்றையெல்லாம் வீடியோவாகப் பதிவு செய்ய ஏற்பாடுகளைச் செய்திருந்தார் கபிலா. கடந்த இரண்டு வருடமாக எதிர்பார்த்த அளவுக்குக் குறிகேட்பதற்குப் பக்தர்கள் கோயிலுக்கு வரவில்லை. இதனால் கோயிலை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் தன்னுடைய வட்டாரத்தில் ஆலோசனை கேட்டிருக்கிறார் கபிலா. `உங்க பேரில் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கிவிடலாம். அதில் கோயில் தொடர்பான பரபரப்பு வீடியோக்களை போட்டால், பக்தர்கள் அதிக அளவு வருவார்கள்’ என ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். பிறகு, யூடியூபில் அந்த வீடீயோக்களை பதிவேற்றம் செய்தனர். சமூக வலைதளங்களில் வேகமாக இந்த வீடியோ பரவியதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிரிஜாலா உத்தரவின்படி செங்கல்பட்டு வனச்சரகர் பாண்டுரங்கன் தலைமையிலான வனத்துறை கபிலாவிடம் நாக பூஜை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பெண் சாமியார் கபிலா
பெண் சாமியார் கபிலா

`அம்மன் கனவில் வந்து பாம்புக்குப் பூஜை செய்யச் சொன்னார். அம்மன் அருள் வந்ததால் பாம்பை என் கழுத்தில் சுற்றினார்கள்’ என வனத்துறையினருக்கு விளக்கம் கொடுத்தார் கபிலா. இதைத் தொடர்ந்து பெண் சாமியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.“கோயிலுக்குப் பக்தர்கள் அதிக அளவில் வர வேண்டும் என விளம்பரத்துக்காகக் கபிலா கழுத்தில் நல்ல பாம்பை சுற்றிக்கொண்டும், சாமி கழுத்தில் பாம்பை மாலையாக அணிவித்தும் இருக்கிறார். இதை யூடியூபிலும் பதிவு செய்திருக்கிறார்கள். 1972 இந்திய வனவியல் சட்டத்தில் பட்டியல் இரண்டின் மூலம் தடைசெய்யப்பட்டுள்ள வன உயிரினத்தில் நல்ல பாம்பும் உள்ளது. நல்லபாம்பை காட்சிப்படுத்துவதோ, வணிக நோக்கத்துக்காகப் பயன்படுத்துவது குற்றமாகும். இது அபராதம் விதிக்க வேண்டிய குற்றம் அல்ல. நீதிமன்றத்தால் தண்டனை அளிக்க வேண்டிய குற்றம்” என்கிறார்கள் வனத்துறையினர்.

நன்றி – விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More