எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அரச ஊழியர்களின் சம்பளத்தில் 30 வீதத்தை குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தற்போது வங்குரோத்து நிலைமைக்கு சென்றுள்ளதால், இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் முப்பது ஆண்டுகள் போர் நடைபெற்ற போது கூட அரசாங்கம் அரச ஊழியர்களிடம் பணத்தை கேட்டதில்லை. எனினும் தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை கோரியுள்ளதன் மூலம் அரசாங்கத்தினால் பொருளாதாரத்தை கையாள முடியாதுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலுக்கு நிதி தேவையெனில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டினால், அதற்கான ஒத்துழைப்பை எதிர்க்கட்சியினர் வழங்குவர். எனினும் அதிவேக நெடுஞ்சாலை போன்ற பணத்தை கொள்ளையிடும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.