December 2, 2023 4:46 pm

முல்லைத்தீவு நீதிபதி பதவி துறப்பு! – கனடாவில் தஞ்சம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாகத் தான் வகித்து வந்த நீதிபதிப் பதவி மற்றும் பொறுப்புக்கள் அனைத்தையும் விட்டு விலகியுள்ளார் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா. அதேவேளை, அவர் நாட்டை விட்டும் வெளியேறிக் கனடாவில் தஞ்சமடைந்துள்ளார்.

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகளின்போது தன்னால் வழங்கப்பட்ட கட்டளைகளுக்கு எதிராகவே தான் உயிர் அச்சுறுத்தலையும், தொடர்ச்சியான அழுத்தங்களையும் எதிர்கொண்டார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது பதவி விலகல் கடிதத்தை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்.

தனது பதவி விலகல் தொடர்பில் கனடாவில் வைத்து தமிழ் ஊடகவியலாளர் ஒருவரிடம் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“குருந்தூர்மலை வழக்கில் நான் வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

அண்மையில் எனக்கான (நீதிபதிக்கான) பொலிஸ் பாதுகாப்பும் குறைக்கப்பட்ட அதேவேளை, புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்து வந்தனர்.

சட்டமா அதிபர், என்னை (முல்லைத்தீவு நீதிபதியை) தனது அலுவலகத்தில் 21.09.2023 ஆம் திகதியன்று சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தார்.

குருந்தூர்மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன்.

இது குறித்த பதவி விலகல் கடிதத்தை கடந்த 23.09.2023 ஆம் திகதியன்று அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளேன்.” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்