2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்தில் இன்றிரவு அபுதாபியில் ஆரம்பமாகும் எட்டாவது போட்டியில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் மோதவுள்ளன.
ஏழு விக்கெட் வெற்றியுடன் டி-20 உலகக் கிண்ண போட்டிகளைத் தொடங்கிய இரு அணிகளும் அடுத்த சுற்றில் தங்கள் இடத்தை உறுதி செய்ய இந்த ஆட்டத்தில் முட்டி மோதும்.
அயர்லாந்து மற்றும் இலங்கை முறையே நெதர்லாந்து மற்றும் நமீபியாவுக்கு எதிரான தொடக்க ஆட்டங்களில் வெற்றிகளை உருவாக்கியுள்ளனர்.
இரு அணிகளும் தமது பந்து வீச்சாளர்களின் திறமையினால் எதிரணியினரை குறைந்த ஓட்டங்களில் கட்டுப்படுத்தி, முதல் ஆட்டத்தில் இலகுவான வெற்றியினை பதிவுசெய்துள்ளனர்.
நெதர்லாந்துக்கு எதிராக திங்களன்று வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்னர் அயர்லாந்து (12 ஆவது இடம்) தன்னம்பிக்கையுடன் இருக்கும் என்பதால், இலங்கைக்கு (10 ஆவது) இது ஒரு பாரிய சவாலாக அமையும்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கான தகுதியைப் பெறுவார்கள், அதேநேரம் தோல்வி அடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு மூன்றாவது ஆட்டத்தில் காத்துள்ளது.
இலங்கையும் அயர்லாந்தும் முந்தைய ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்தன, அந்த போட்டியில் இலங்கை வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.