Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டம் | 3 போட்டிகள் இன்று

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டம் | 3 போட்டிகள் இன்று

2 minutes read

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் 3 போட்டிகள் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளன.

மிகவும் பழைமைவாய்ந்த சோண்டர்ஸ் கழகத்துக்கும் ஜாவா லேன் கழகத்துக்கும் இடையிலான போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கிலும் நிகம்போ யூத் கழகத்துக்கும் பொலிஸ் கழகத்துக்கும் இடையிலான போட்டி காலியிலும் சொலிட் கழகத்துக்கும் நியூ ஸ்டார் கழகத்துக்கும் இடையிலான போட்டி குருநாகல், மாளிகாபிட்டியிலும் நடைபெறவுள்ளன.

இந்த மூன்று போட்டிகளும் பரபரப்பை ஏற்படுத்தக்   கூடியவையாக இருக்கும் அதேவேளை, சோண்டர்ஸ் – ஜாவா லேன் அணிகளுக்கு இடையிலான போட்டி முக்கிய இடம் பிடிக்கிறது.

தனது முதல் இரண்டு போட்டிகளில் சவால்களுக்கு மத்தியில் வெற்றியீட்டிய ஜாவா லேன் கழகத்துக்கு இன்றைய போட்டி இலகுவாக அமையும் என்று சொல்வதற்கில்லை.

பொதுவாக கால்பந்தாட்ட அரங்கில் ‘பரம வைரி’களாக கருதப்படும் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் இதுகாலம் வரை நடைபெற்ற போட்டிகள் எல்லாம் மிகவும் பரபரப்பை தோற்றுவித்துள்ளதால் இன்றைய போட்டியிலும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் எதிர்பார்க்கலாம்.

சோண்டர்ஸ் கழகம் இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றியையும் ஈட்டவில்லை. ஒரு போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்ட சோண்டர்ஸ், 2ஆவது போட்டியில் தோல்வியைத் தழுவியது.

இன்று தனது முதலாவது வெற்றியை ஈட்டுவதாக இருந்தால் சோண்டர்ஸ் கழகம் முதிய வீரர்களில் மாத்திரம் அல்லாமல் இளையவர்களிலும் நம்பிக்கை கொள்வது அவசியமாகும்.

ஜாவா லேன் கழகமும் மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் அதேவேளை 60 அல்லது 70 நிமிடங்களின் பின்னர் இளையவர்களை கூடுதலாக ஈடுபடுத்தி விளையாடுவது அவசியமாகும்.

இதேவேளை, நிகம்போ யூத் கழகத்துக்கும் பொலிஸ் கழகத்துக்கும் இடையிலான போட்டியும் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

நிகம்போ யூத் கழகம் ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததுடன் மற்றைய போட்டியில் வெற்றியீட்டியுள்ளது. பொலிஸ் கழகம் தனது 2 போட்டிகளிலும் தோல்விகளைத் தழுவியுள்ளது.

எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் பொலிஸ் கழகம் தனது முதலாவது வெற்றிக்காக கடுமையாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சொலிட்   எதிர் நியூ ஸ்டார்

சொலிட் கழகத்துகும் நியூ ஸ்டார் கழகத்துக்கும் இடையிலான போட்டி நடுநிலையான குருநாகல், மாளிகாபிட்டி மைதானத்தில் நடைபெறுவதால் இந்த போட்டி கடைசிவரை விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு அணிகளும் உள்ளூர் வீரர்களில் மாத்திரம் நம்பிக்கைக் கொண்டு வெளிநாட்டு வீரர்களை இணைக்காமல் விளையாடி வருகின்றமை பாராட்டுக்குரியதாகும்.

மாகாண மட்டப் போட்டிகளில் விளையாடிய பலர் இரண்டு அணிகளிலும் இடம்பெறுவதுடன் வட மாகாண வீரர்களும் விளையாடுகின்றமை விசேட அம்சமாகும்.

இந்த இரண்டு அணிகளில் எந்த அணி சிறந்த வியூகங்களுடன் விளையாடுகின்றதோ அந்த அணியே வெற்றிபெறக் கூடியதாக இருக்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More