பொரளை டி. எஸ். சேனாநாயக்க கல்லூரிக்கும் கொள்ளுப்பிட்டி மஹாநாம கல்லூரிக்கும் இடையிலான 17ஆவது பொன் அணிகளின் 2 நாள் கிரிக்கெட் சமர் கொழும்பு, பி. சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமையும் (24) , சனிக்கிழமையும் (25) நடைபெறவுள்ளது.
இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இரண்டு கல்லூரிகளுக்கும் இடையில் நட்புறவையும் சகோதரத்துவத்தையும் கட்டி எழுப்புவதில் இரண்டு கல்லூரிகளினதும் மாணவர்களும் பழைய மாணவர்களும் மிகுந்த அக்கறையுடன் செயற்படுவதாகவும் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி அதற்கான அடித்தளத்தை இடுவதாகவும் மஹாநாம கல்லூரி அதிபர் ஏ. சி. பெரேரா கூறினார்.
இந்தத் தொடரில் மஹாநாம இதுவரை ஒரு வெற்றியையும் ஈட்டாதது கவலை அளிக்கிறது எனத் தெரிவித்த அவர் அந்தக் குறைப்பாட்டை தற்போதைய அணி நிவர்த்திசெய்யும் என நம்புவதாகக் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க, இந்த வருடத்திலிருந்து இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி டி. எஸ். சேனாநாயக்க கல்லூரியின் முன்னாள் தலைவரும் இலங்கையின் முன்னாள் அணித் தலைவருமான அரவிந்த டி சில்வா கிண்ணத்திற்காக நடத்தப்படும் என டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி அதிபர் சம்ப்பத் வேரகொட தெரிவித்தார்.
டி.எஸ். சேனாநாயக்க அணிக்கு இம்முறை மனுர பீரிஸ் தலைவராகவும் மஹாநாம அணிக்கு சச்சிர வெலிவிட்ட தலைவராகவும் விளையாடுகின்றனர்.
அவர்கள் இருவரும் தத்தமது அணிகளே வெற்றிபெறும் என நம்பிக்கை வெளியிட்டனர்.
கோசல குருப்புஆராச்சி, அரவிந்த டி சில்வா, ஹஷான் திலக்கரட்ன, புபுது தசநாயக்க, நவீட் நவாஸ், புலஸ்தி குணரட்ன, இசுறு உதான ஆகியோர் டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியினால் உருவாக்கப்பட்ட தேசிய கிரிக்கெட் வீரர்களாவர்.
மஹாநாம கல்லூரியினால் உவாக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் லிலதிமான பெர்னாண்டோ, தனுஷ்க குணதிலக்க ஆகிய இருவர் தேசிய அணியில் இடம்பெற்றனர்.