ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதல் முறையாக ‘போர்க் குற்றவாளி’ என்று குறிப்பிட்டுள்ளது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் பதற்றத்துக்கு உள்ளாக்கும் என்று கருதப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது பைடன் இவ்வாறு குறிப்பிட்டார்.
ரஷ்ய ஜனாதிபதி புட்டினை கண்டிக்க பைடன் இதுபோன்ற சொல்லாடலை பயன்படுத்துவது இதுவே முதல் முறை. மேலும் இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்த வெள்ளை மாளிகை பைடன் “அவரது இதயத்திலிருந்து பேசியதாக” கூறியது.
இந்த நிலையில், பைடனின் கருத்துக்கு பதிலளித்துள்ள ரஷ்யா, இது “மன்னிக்க முடியாத சொல்லாட்சி” என்று தெரிவித்துள்ளது.
“உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த குண்டுகளுக்கு பின்னணியில் உள்ள ஒரு நாட்டு ஜனாதிபதியின் இத்தகைய சொல்லாட்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் மன்னிக்க முடியாதவை என்று நாங்கள் நம்புகிறோம,” என்று ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸ்ஸிடம் அந்த நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.