ரஷ்யா ஜனாதிபதி விளாதிமிர் பூட்டினை கைது செய்தால், ஜெர்மனி மீது போர் தொடுப்போம் என ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உத்தரவின் அடிப்படையில், ரஷ்ய ஜனாதிபதி பூட்டினை கைது செய்ய முயற்சிப்பது, ரஷ்யா மீதான போர் அறிவிப்பாகவே கருதப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
போரின் போது, உக்ரேனிய குழந்தைகளை நாடு கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பூட்டினை கைது செய்ய, ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையிலேயே, ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அணு ஆயுத பலம் கொண்ட ரஷ்யாவின் ஜனாதிபதி, ஜெர்மனியின் எல்லைக்குள் வைத்து கைது செய்யப்படுகிறார் என்றால் அது ரஷ்யாவுக்கு எதிரான நேரடிப் போராகவே கருதப்படும் எனவும், அப்போது எங்களின் ராக்கெட்டுகள் ஜெர்மனை தாக்கும் என்றும் மெத்வதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.