பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுகூட்டத்தில் இம்ரான் கான் நீதிபதி, மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதனால் அவர் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது
இம்ரான்கான் மீது ஊழல், பயங்கரவாதம், வன்முறை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக அவர் கோர்ட்டில் ஆஜராக வந்தார். இதற்கிடையே ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இம்ரான்கான் இஸ்லாமாபாத் கோர்ட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த துணை ராணுவத்தினர் இம்ரான்கானை (09.05.2023) மதியம் அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் இருந்து இழுத்து சென்றனர்.
கைது நடவடிக்கையை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இம்ரான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று கூறியதுடன், அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு இம்ரான் கான் ஆஜராக வேண்டும் என்றும் கூறியிருந்தது.
அதன்படி இன்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரது ஜாமீன் மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், அவருக்கு இடைக்கால நிவாரணமாக, 2 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கியது. அவரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது.