வாரத்தின் இதர நாட்களை விட வாரத்தின் முதல் வேலை நாளான திங்கட்கிழமை மாரடைப்பு அதிகரிப்பதாக, மருத்துவ ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தை பின்புலமாக கொண்ட மருத்துவக் குழு, 2013 -2018 ஆண்டுகளுக்கு இடையே அயர்லாந்தின் மருத்துவமனைகளை நாடிய 10,528 மாரடைப்பு
நோயாளிகள் மத்தியில் இந்த ஆய்வை மேற்கொண்டது.
அதில் கிடைத்த தரவுகளில் ஒன்று, மருத்துவர்களுக்கு ஆச்சரியமளித்தது.
அதாவது, மிகத்தீவிரமான மாரடைப்பு பாதிப்பு திங்கட்கிழமை ஏற்படுகிறது. ஞாயிறு உட்பட வாரத்தின் இதர நாட்களோடு ஒப்பிடுகையில், திங்கட்கிழமை மாரடைப்புகள் அதிக எண்ணிக்கையிலும் தீவிர பாதிப்போடும் நோயாளிகளை பாதித்துள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாரத்தின் முதல் வேலை நாளில் அசௌகரியத்தை உணர்வது இயல்பு என்றபோதும், மாரடைப்பு அளவுக்கு தீவிரமாக எழுந்திருப்பது மக்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகிறது.
அயர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் அடுத்தக்கட்டமாக, 5 நிமிடங்களுக்கு ஒரு மாரடைப்பு காணும் இங்கிலாந்து முழுமைக்குமான மருத்துவ தரவுகளை அடிப்படையாக கொண்டு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.