கங்கைகொண்டசோழபுரத்தில் மாமன்னன் இராசேந்திரச்சோழனின் சிலையை நிறுவும் பணிகளுக்காக, புதுடெல்லியில் இருந்து இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் (IGNCA) உறுப்பினர் செயலாளர் டொக்டர் சச்சிதானந்த ஜோஷி அவர்கள், நேற்று (28) வருகை தந்து விரிவான கள ஆய்வு மேற்கொண்டார்.
பிரபல எழுத்தாளரும், வரலாற்றாசிரியருமான டொக்டர் சச்சிதானந்த ஜோஷி, சிலையின் அமைப்பு மற்றும் அது நிறுவப்பட வேண்டிய பொருத்தமான இடம் குறித்து நேரடி ஆய்வுகளை நடத்தினார். இந்த ஆய்வின் போது சிலையின் வடிவமைப்புக்கான முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மாமன்னர் இராசேந்திரச்சோழனின் 32 ஆண்டுகால ஆட்சிச் சிறப்பை உலகுக்கு பறைசாற்றும் வகையில், சிலையின் அளவுகள் மற்றும் அமைப்புகள் 32 எனும் விகிதத்தில் அமைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இராசேந்திரச்சோழனின் வெற்றிச் சின்னமான பொன்னேரியில் இச்சிலையை நிறுவுவது, அவரது புகழை என்றும் நிலைத்து நிற்கச் செய்யும் என்பதால் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சிலை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மிக வேகமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன்மூலம் கங்கைகொண்டசோழபுரத்தில் மாமன்னர் இராசேந்திரச்சோழனுக்கு சிலை எழுவது உறுதியாகியுள்ளது.


