உக்ரைன்-ரஷ்யா இடையே 17 மாதங்களையும் தாண்டி தொடர்ந்தும் போர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக உச்சி மாநாடு ஒன்றை ஓகஸ்ட் மாதம் நடத்த உக்ரைன் முடிவு செய்துள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற அரபு லீக் மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்துகொண்டார்.
போர் தொடங்கியது முதல் அரபு நாடுகள் நடுநிலை வகித்து வருகின்றன. எனவே, இந்த போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்ய உதவும்படி அவர் அதன்போது கேட்டுக்கொண்டார்.
அதன்படி, இதற்கான ஏற்பாடுகளை சவுதி அரேபியா அரசாங்கம் செய்து வருகிறது. இந்த மாநாடு, செங்கடல் அருகே உள்ள துறைமுக நகரமான ஜெட்டாவில் நடைபெற உள்ளது.
இதில் உக்ரைன், பிரேசில், இந்தியா உட்பட சுமார் 30 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அமெரிக்கா சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனின் உயர் மட்ட அதிகாரி ஒருவரும் கலந்துகொள்ள உள்ளார்.
எனினும், இந்த மாநாட்டில் ரஷ்யா பங்கேற்குமா என்பது உறுதி செய்யப்படவில்லை.
மேலும், மாநாட்டின் திகதி உள்ளிட்ட விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.