பிரேசில் நாட்டை சேர்ந்த ஜூலியானா மரின்ஸ் (வயது 26) என்ற இன்ஸ்டாகிராம் பிரபலம், வெளிநாடுகளுக்கு சென்று வீடியோ பதிவிட்டு வருகின்றார்.
இவரை சுமார் 3½ இலட்சம் பேர் பின்தொடர்ந்து வரும் நிலையில், இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்ற ஜூலியானா, அங்குள்ள 3,500 மீட்டர் உயரம் கொண்ட எரிமலை சிகரமான ரின்ஜானிக்கு கடந்த 22ஆம் திகதி மலையேற்ற சாகசத்தில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாராதவிதமாக எரிமலையில் இருந்து இராட்சத பள்ளத்தாக்கில் சுமார் 600 அடியில் தவறி விழுந்தார். தகவலறிந்த பேரிடர் மீட்புத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
டிரோன் மூலமாக அவர் இருக்கும் இடத்தை கண்காணித்தபோது, அப்போது மண்ணில் சிக்கி அவர் உயிருக்கு போராடி வந்தது தெரிந்தது. தொடர்ந்து கயிறு கட்டி கீழே இறங்கி மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
அவரை மீட்பதற்கு கடும்பனியும், செங்குத்தான மலைப் பாறைகளும் பெரும் தடையாக அமைந்தன.
இதனையடுத்து, அவர் 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். ஜூலியானா உடல் 4 நாட்களுக்கு பிறகு மீட்டு மேலே கொண்டு வரப்பட்டது.
இந்தோனேசிய மீட்புக்குழு அவரது குடும்பத்தினரைச் சந்தித்துத் தகவலைத் தெரிவித்தது.
இந்தோனேசியாவின் ரின்ஜானி எரிமலை மிகப்பிரபலமான சுற்றுலாத் தலம் ஆகும். கடந்த சில ஆண்டுகளில் அந்த மலைக்குச் சென்ற பல உள்ளூர், வெளிநாட்டுச் சுற்றுபயணிகள் விபத்துகளில் உயிரிழந்தனர்.
