சீனாவில் ரயில் பாலம் ஒன்று இரண்டாகப் பிளந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் சிங்ஹாய் (Qinghai) எனும் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக South China Morning Post செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்தச் சம்பவத்தில் நால்வர் காணமல் போயுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Jianzha Yellow River ஆற்றில் 130 மீட்டர் உயரத்தில் இருக்கும் குறித்த பாலத்தை வலுப்படுத்தச் சிறப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது.
சுமார் 1.6 கிலோமீட்டர் பாலத்தில் எஃகுக் கம்பிவடம் திடீரென்று உடைந்ததாகவும் பாலம் இரண்டாகப் பிளந்ததாகவும் கூறப்பட்டது.
அதையொட்டி வெளியிடப்பட்ட காணொளியில், பாலத்தின் நடுப்பகுதி ஆற்றுக்குள் விழுவதைக் காணமுடிகிறது.
அப்போது பெரும் சத்தத்தைக் கேட்டதாக வட்டாரவாசிகள் South China Morning Post இடம் கூறினர்.
மீட்புப் பணியில் 800க்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.
பாலம் எப்படி உடைந்தது என்பதைக் கண்டறிய விசாரணை தொடர்கிறது.