சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதக் குழுக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளின் போது 71 பேர் கைது செய்யப்பட்டனர்.
61 சோதனை நடவடிக்கைகளின்போது, வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிரிய உள்துறை அமைச்சகம் “துல்லியமான” உளவுத் தகவல்களின் அடிப்படையில் தாங்கள் செயல்பட்டதாக வெளிப்படுத்தியது.
கைது செய்யப்பட்டவர்களில் “பலர்” தேடப்படும் குற்றவாளிகள் என்றும், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் அவர்களை இணைக்கும் ஆதாரங்களை படைகள் பெற்றுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேடுதல் நடவடிக்கைகள், ஐ.எஸ். அமைப்பு புதிய தாக்குதல்களைத் தொடங்கத் திட்டமிடுவதாக வந்த தகவல்களை அதிகாரிகள் இடைமறித்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதாக சிரிய அரபு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஒடுக்குமுறை நடவடிக்கை, “பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் குடிமக்களை இலக்கு வைக்கும் சதிகளுக்கு முகம் கொடுப்பதற்கும்” நடக்கும் தேசிய முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
“தற்போதுள்ள முக்கிய அச்சுறுத்தல் என்னவென்றால், ஐ.எஸ். தன்னை மறுசீரமைத்துக் கொள்ளவும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும் முயற்சிப்பதாகும்” என உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Nour al Din al Baba, கூறியுள்ளார்.
இந்தச் சோதனைகள் நடைபெறும் அதே நேரத்தில், சிரிய ஜனாதிபதி அஹ்மத் அல் ஷராஆ, வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் டொனால்ட் ட்ரம்ப்புடன் ஒரு சந்திப்பில் பங்கேற்கிறார், மேலும் சிரியா மற்றும் ஈராக்கில் ISIS என்றும் அழைக்கப்படும் ஐ.எஸ். அமைப்பிற்கு எதிரான கூட்டணியில் அவர் இணைவார்.
முன்னாள் ஜனாதிபதி பஷார் அல் அசாத் 25 ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு, கடந்த ஆண்டு இறுதியில் வெளியேற்றப்பட்டு, அவரது ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றார்.
அதன்பிறகு, அல் ஷராஆவின் இடைக்கால நிர்வாகம் பாதுகாப்பை மீட்டெடுக்கவும், பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தவும், சர்வதேசப் பங்காளிகளுடன் ஒத்துழைக்கவும் முயன்று வருகிறது.