பங்களாதேஷில் ஜனநாயக ஆதரவுத் தலைவர் ஷரிஃப் ஒஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டில் கடும் வன்முறை வெடித்துள்ளது. இம்மாதம் 12ஆம் திகதி முகமூடி அணிந்த நபர்கள் அவரைச் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கிக் காயங்களுடன் அவர் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஷரிஃபின் மரணத்திற்கு காரணமான தாக்குதலாளர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி, தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் 32 வயதான ஷரிஃப் ஒஸ்மான் முக்கிய பங்காற்றியிருந்தார். மேலும், அடுத்த ஆண்டு பெப்ரவரியில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடவும் அவர் திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
டாக்காவில் உள்ள ஒரு பள்ளிவாசலிலிருந்து வெளியே வந்தபோது அவர் சுடப்பட்டார். அவரது மரணச் செய்தி வெளியானதும், தலைநகர் டாக்காவில் குறைந்தது மூன்று இடங்களில் தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷின் இரண்டு முக்கிய பத்திரிகை அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டதாகவும், அந்த நேரத்தில் அங்கு ஊழியர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நாட்டில் வன்முறை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், நிலைமையை கட்டுப்படுத்தி, நியாயமான மற்றும் சுதந்திரமான பொதுத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தற்காலிக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.