இந்தோனேசியாவில் 11 பேருடன் பயணித்த ATR 42-500 வகை விமானம் காணாமல் போனதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த விமானம் மக்காசர் நகருக்கு அருகே மாயமானதாக சந்தேகிக்கப்படுகிறது.
காணாமல் போன விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்திற்கு சொந்தமானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. விமானத்தின் நிலை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகாத நிலையில், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மக்காசர் தேடல் மற்றும் மீட்பு அமைப்பின் தகவலின்படி, விமானம் யோககர்த்தா நகரிலிருந்து புறப்பட்டு, மூன்று பயணிகள் மற்றும் எட்டு பணியாளர்களுடன் சுலவேசி தீவில் உள்ள மக்காசர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.
தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தின் செயல்பாட்டுத் தலைவர் ஆண்டி சுல்தான், விமானத்தை கண்டறிய ஹெலிகொப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
