வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கங்களால் உருவாகியுள்ள பேரழிவு நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார். இந்த நிலநடுக்கங்கள் மிகப்பெரிய அளவிலான சேதங்களை ஏற்படுத்தியிருப்பதுடன், பெருமளவிலான உயிரிழப்புகளையும் உருவாக்கியிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், வெனிசுலா மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்கா முழுமையாக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்காக அமெரிக்க அரசின் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் அவசர நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், “எங்களுடைய புதிய மற்றும் சிறந்த நண்பர்களுக்காக நாங்கள் உறுதியாக துணை நிற்போம். ஆரம்பகட்ட தகவல்கள் எதுவும் சாதகமான நிலையை காட்டவில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க ராணுவ நடவடிக்கையின் பின்னணியில் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் சிறைவைக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் உயிரிழப்புகள் குறித்து பல்வேறு கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஆரம்ப தகவல்களின் அடிப்படையில், இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 700 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் வெனிசுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், மொத்த உயிரிழப்புகள் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.
இதற்கிடையில், நிலநடுக்கத்தால் ஏற்படக்கூடிய மனித உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகள் தொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS புதிய மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.
அந்த மதிப்பீடுகளின் படி, உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,000 முதல் 10,000 வரை இருப்பதற்கான சாத்தியம் 39 சதவீதமாக காணப்படுகின்றது. அதேவேளை, உயிரிழப்புகள் 10,000 முதல் 100,000 வரை அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு 37 சதவீதம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பாதிப்புகளைப் பொறுத்தவரை, வெனிசுலாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை இழப்பு ஏற்படலாம் என USGS மதிப்பிட்டுள்ளது.