யார்க் (York) பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய மையத்துக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து 44 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யார்க் நகரத்தைச் சேர்ந்த இங்கிலாந்து பிரஜை ஆவார்.
புல் வீதியில் (Bull Lane) அமைந்துள்ள இந்த பள்ளிவாசலுக்கு வெளியே அதிகாலை 02:15 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வடக்கு யார்க்ஷயர் (North Yorkshire) பொலிஸ் தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து ஒரு வெள்ளி நிற வாகனத்தில் தப்பிச் சென்ற சந்தேகநபர், பின்னர் பிடிபட்டார். தற்போது அவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் பயன்படுத்தியது ஏர் ரைபிள் (air rifle) என்று நம்பப்படுகிறது. மேலும் இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த அச்சுறுத்தும் சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது குறித்துக் கூறுவதற்கு இன்னும் காலம் கனியவில்லை என்றும், முழுமையான உண்மைகளைக் கண்டறியத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் சமூகத்துக்குப் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை வழங்கும் வகையில், தொழுகை நேரங்களில் பள்ளிவாசலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
மேலும், அதிகாரிகள், பள்ளிவாசலின் பொறுப்பாளர்களைச் சந்தித்துப் பேச உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் அல்லது சிசிடிவி (CCTV) மற்றும் வாகனப் பதிவுக் கேமரா (dashcam) காட்சிகள் வைத்திருப்பவர்கள் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.