வங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு செல்லும் முயற்சியில் 138 ரோஹிங்கியாக்களுடன் விபத்திற்கு உள்ளான படகு சம்பவம் தொடர்பாக, 9 மனித கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதே சமயம், ஏஜெண்ட்களாக செயல்பட்டதாக 19 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வங்கதேசத்தின் துணைக் காவல் தளபதி இக்பால் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
இப்படகு விபத்தில் 15 அகதிகள் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மலேசியா மற்றும் இந்தோனேசியா நோக்கி படகு வழியாக செல்ல 25,000 ரோஹிங்கியா அகதிகள் முயன்றிருக்கின்றனர். இவ்வாறான முயற்சியில், 713 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 2017ல் மியான்மரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். மியான்மரின் ரக்ஹைன் பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை இனச்சுத்தரிகரிப்போடு ஒப்பிட்ட ஐக்கிய நாடுகள் சபை ‘இனச்சுத்திகரிப்பை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை வெளிப்படுத்தும் பாடப்புத்தகம் இது’ எனக் குறிப்பிட்டிருந்தது.