உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களின் மத ஸ்தலங்களையும் அவர்களது சொத்துகளையும் சேதப்படுத்தியவர்கள் இன்று முஸ்லிம்களிடத்தில் வந்து வெட்கமற்ற முறையில் வாக்குக் கேட்க முனைகின்றனர். ஒரு போதும் உண்மையான முஸ்லிம்கள் இதனை அங்கீகரிக்க மாட்டார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கத்தோலிக்க மத வழிபாட்டுத் தலங்களின் மீதான தாக்குதல் சம்பவத்தையடுத்து முஸ்லிம் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவத்தினால் சேதமடைந்த பள்ளிவாசல்களைப் புனரமைப்பு செய்வதற்காக வேண்டி காசோலைகள் வழங்கும் நிகழ்வு புத்தளம் மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் (பெரியபள்ளி) தலைவர் பீ.எம்.ஏ.ஜனாப் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றபோது இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான ஏ.எச்.எம்.ஹலீம், பிரதி அமைச்சர் திலிப் வெதஆராச்சி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.பௌஸி, பாலித ரங்க பண்டார, ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, டாக்டர் இல்யாஸ், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம், ஐக்கிய தேசிய கட்சி கற்பிட்டி அமைப்பாளர் எம்.என்.எம்.நஸ்மி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் அமைச்சர் சஜித் பிரேமதாச தமதுரையில் கூறுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து இந்த நாட்டில் இன ரீதியிலான மோதல்களை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்ட இனவாதிகள் அவர்கள் எதிர்பார்த்த இலக்கை அடைந்து கொள்ள முடியாது போனது. நாட்டையும் மக்களையும் நேசிக்கும் பெரும்பாலான சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் நாடு தீப்பற்றி எரியும் நிலையை ஏற்படுத்தவிடாமல் தடுத்ததை நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
குறிப்பாக இலங்கையின் அரசியல் அமைப் பின் 9ஆவது பிரிவில் பௌத்த மதத்துக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளதுடன் இதனை பாதுகாப்பதும் எமது அனைவரதும் பொறுப்பாகும். அது மட்டுமல்ல 14 ஆம் பிரிவில் அதே போன்று ஏனைய மதங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பையும், உரிமையையும் வழங்க வேண்டும் என்பதில் நான் உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கின்றேன். புத்தபிரான் போதித்த தர்மத்துக்கு அமைவாக சகலரும் சமமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாம் எம்மில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
சத்தியத்தைப் புரிந்துகொள்ளும் காலம் தற்போது ஏற்பட்டுள்ளது. யதார்த்தத்தை புரிந்து அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியுள்ளது. மத ரீதியானதும் இன ரீதியானதுமான அடிப்படைவாதச் செயற்பாடுகளுக்கு எமது நாட்டில் இனி இடம் கொடுக்க முடியாது.
நாட்டில் ஏதாவது வடிவில் மதங்களுக்குள்ளும், நாட்டுக்குள்ளும் அடிப்படைவாதம் எங்காவது காணப்படும் என்றால் அதனை ஒழித்தே ஆக வேண்டும். இதுமட்டுமல்லாமல் பயங்கரவாதத்துக்கும் இனி எமது நாட்டில் இடம் கொடுக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டுவதுடன், எவ்வாறு பௌத்த விகாரைகளை நாங்கள் பாதுகாக்க நடவடிக்கையெடுக்கின்றோமோ அதே போன்று எமது நாட்டிலுள்ள அனைத்து ஏனைய மத ஸ்தலங்களையும் நாம் பாதுகாப்பதற்கான உறுதியை வழங்குகின்றேன் என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச கூறினார்.அமைச்சர் சஜித் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை தருவதை முன்னிட்டு, அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நிகழ்வுக்கு வருகை தந்த ஊடகவியலாளர்கள் உட்பட அனைவரும் கடும் சோதனைக்குப் பின்னரே பள்ளிவாசலினுள் செல்ல அனுமதிக் கப்பட்டனர்.