கடந்த 07.06.2020 அன்று தமிழகத்தில் தமிழ் பட்டறை இலக்கிய பேரவை நடாத்திய “சிங்கப்பெண்ணே” சிறுகதைப் போட்டியில் இச் சிறுகதையானது முதலாம் பரிசினை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்று காலை ஏழு மணிக்கே சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டான். கமலி கொட்டாஞ்சேனையில் இருந்து வெள்ளவத்தை போகும் பேரூந்தில் ஏறினாள். கூட்டமோ நிறையவே இருந்தது. இருக்க ஏதாவது ஒரு இடம் கிடைத்தால் நல்லது என்று நினைத்துக் கொண்டாள்.
இனப்பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் உச்ச காலகட்டம் அது. சிங்கள மொழி சிறிதும் தெரியாத கமலி, கிளிநொச்சியில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து நேர்முகத் தேர்வுக்காக கொழும்பு வந்திருந்தாள்.
ஒரு பெண்ணிற்கு அருகில் இடம் காலியாக இருக்க அப்பாடா என்று போய் அமர்ந்து கொண்டாள். அந்தப் பெண்ணோ தான் இறங்கும் இடம் வர அடுத்த தரிப்பிடத்திலேயே இறங்கிக் கொண்டாள்.
கமலி வெளியில் தனது பார்வையைச் செலுத்தத் தொடங்கினாள். எப்போதுமே யன்னலூடாக வெளிப்புறக் காட்சியை கண்டு களிப்பதில் கொள்ளைப் பிரியம் அவளுக்கு. அழகழகான கட்டடங்களும் வீதியோரப் பூமரங்களும் அவளைக் கவர்ந்தன.
அந்நேரம் அவளருகில் ஒரு ஆடவன் வந்தமர்ந்தான். ஆள் வாட்ட சாட்டமாகத்தான் இருந்தான் ஆனால் அவன் பார்க்கும் பார்வையோ கமலியை அப்படியே விழுங்கி விடுவது போல் இருந்தது. அவனது பார்வையைத் தவிர்க்க மீண்டும் வெளியில் பார்க்கத் தொடங்கினாள்.
தனது கையை மெதுவாக எடுத்து கமலியின் தொடையைத் தடவத் தொடங்கினான் அவன். உடனடியாகவே கமலி சுதாரித்துக் கொண்டு கையில் கொண்டு வந்திருந்த குடையால் சரமாரியாக அவனை அடித்தாள். மொத்தக் கூட்டமும் அவர்களைப் பார்த்தது. ஆனால் யாரும் அவளுக்காக பரிந்து கொண்டு வரவில்லை. அந்த இடத்தில் அவள் அதை எதிர் பார்க்க முடியாது என்பதும் அவளுக்குத் தெரியும். ஈனச் செயல் புரிந்த ஆடவனும் வெட்கத்தில் அடுத்த தரிப்பிடத்திலேயே இறங்கி விட்டான்.
கடைசியாக கமலி தனது தரிப்பிடம் வர, அவள் இறங்கிக் கம்பீரமாகப் போகும் அந்த அழகைக் காணும் போது சிங்கள தேசத்தில் ஓர் சிங்கப் பெண்ணாய் காட்சியளித்தாள்.
நிறைவு..
– ஜெயஸ்ரீ சதானந்தன்