ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பாக உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வருகைதருமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவைத் தலைவர் கிரெக் பாக்லேக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிருவாகத்தில் அரசியல் தலையீடு இருக்கிறதா என்பது குறித்து கண்டறிய மூவரடங்கிய குழுவை சரவ்தேச கிரிக்கெட் பேரவை நியமித்துள்ளதாக சமூக ஊடகங்கள், இணையத்தளங்கள், சில பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளதாக அந்தக் கடிதத்தில் அமைச்சர் சுட்டிக்காட்டியே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
‘ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் சுயாதீனமாக செயற்படவேண்டும் என்பது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) நிலைப்பாடாகும். அதனை விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் தானும் ஏற்றுக்கொள்வதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் மாத்திரம் அல்லாமல் பதிவு செய்யப்பட்டுள்ள சகல விளையாட்டுத்துறை சங்கங்கள் மற்றம் சம்மேளனங்கள் சுயாதீனமாக இயங்கவேண்டும் எனவும் அவற்றின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடு இடம்பெறவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
‘இலங்கையில் இயங்கும் விளையாட்டுத்துறை சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் செயற்பாடுகள் முறையாகவும் விதிகளுக்கு கட்டுப்படும்வகையிலும் அமையவேண்டும். முதலில் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு ஒத்துப்போகக்கூடிய சரவ்தேச சம்மேளனங்களின் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு அமைய அவை செயற்படவேண்டும். சம்மேளனங்களின் செயற்பாடுகள் மிகச் சிறந்த முறையில் தெளிவான குறிக்கோள்களுடன் முன்னெடுக்கப்படவேண்டும். அதன் மூலம் நாட்டின் விளையாட்டுத்துறையை மிகவும் சிறந்த முறையில் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும்.
‘விளையாட்டுத்துறை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஊக்கமருந்து தடுப்பு சட்டங்கள் மற்றும் ஊழல் ஒழிப்பு சட்டங்கள் உட்பட நாட்டின் விளையாட்டுத்துறை சட்டங்களுக்கு அமையவே சம்மேளனங்களின் செயற்பாடுகளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சு பங்களிப்பு வழங்குகிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் எப்போதும் விளையாட்டுத்துறையை உயரிய நிலையில் கொண்டு நடத்தும் அதேவேளை, சகல விளையாட்டுத்துறை சம்மேளனங்களுக்கும் அவற்றின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள், அவற்றை எவ்வாறு செயற்படுத்துவது என்பன தொடர்பாக எழுத்துமூலம் விசேட ஆலோசனைகளை வழங்குவதற்கு தனக்கு சட்டபூர்வ அதிகாரம் இருக்கிறது.
‘ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடு இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிகாரிகளுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கிறேன். இதனை முன்னிட்டு தேவையான சூழலை உருவாக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிகாரிகள் விரைவில் செயற்படுவார்கள் என நம்புகிறேன் என அமைச்சரின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.’