செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முல்லையில் காணி அற்றோருக்கு விரைவில் காணி வழங்கப்படும் என பிரதேச செயலாளர் தெரிவிப்பு

முல்லையில் காணி அற்றோருக்கு விரைவில் காணி வழங்கப்படும் என பிரதேச செயலாளர் தெரிவிப்பு

1 minutes read

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,389 பேருக்கு குடியிருப்பதற்கு காணிகள் இல்லையெனத் தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், காணியற்றோருக்கு விரைவில் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்த கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர், எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் காணிக்கச்சேரிகளை நடாத்தி காணியற்றோருக்கு காணிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று புதன்கிழமை (24) இடம்பெற்றது. குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3,389பேருக்கு காணிகள் இல்லை. எனவே காணி அற்றவர்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

குறிப்பாக புதுக்குடியிருப்பில் 1500குடும்பங்களுக்கு காணிகள் இல்லை. இந்நிலையில் கூடியவிரைவில் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகப்பிரிவிற்குட்பட்ட காணியற்றோருக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதேசசெயலாளரால் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் காணியற்றோருக்கு காணிகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென வலியுறுத்தியிருந்தேன். அதற்கமைய துணுக்காய் மாந்தை, ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவுகளிலுள்ள காணியற்ற குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு விரைவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை கரைதுறைப்பற்று பிரதேசத்திலும் 700இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணிகளின்றி இருப்பதாக பிரதேசசெயலகத் தரவுகளின் மூலம் அறியக்கூடியதாகவிருக்கின்றது.

எனவே காணிகளுக்காக விண்ணப்பித்துள்ள எமது மக்களுக்கு விரைவில் காணிகளை வழங்குவதற்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமெனத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறு காணிகளற்ற குடும்பங்களுக்கு காணிகளை வழங்கத்தவறினால், காணிகளற்ற மக்களுடன் இணைந்து பிரதேசசெயலகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும். எனவே விரைவாக குடியிருப்பதற்கு காணிகள் இல்லாத குடும்பங்களுக்கு விரைவில் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் – என்றார்.

இந்நிலையில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் இதன்போது பதிலளிக்கையில்,

காணியற்ற குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கமைய அவ்வாறு காணியற்றோருக்கு வழங்கப்படவேண்டிய காணிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன், அக்காணிகள் அளவீடுசெய்யப்பட்டு வழங்குவதற்கு ஏற்றவகையில் தயார்நிலையிலும் உள்ளன.

எனவே காணியற்றவர்களுடைய பட்டியலை ஆராய்ந்து, எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர்  காணிக்கச்சேரி நடாத்தப்படும் எனத் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.