செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பரபரப்பு: பிரான்ஸ் பேச்சை புறக்கணித்து, அமெரிக்கா வெளிநடப்பு!

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பரபரப்பு: பிரான்ஸ் பேச்சை புறக்கணித்து, அமெரிக்கா வெளிநடப்பு!

1 minutes read

ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்பாக நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இடையிலான தூதரக மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது. பிரான்ஸ் பிரதிநிதிகள் உரையாற்றத் தொடங்கியதும், அமெரிக்க தூதரகக் குழு கூட்ட அரங்கிலிருந்து வெளிநடப்பு செய்த சம்பவம், சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த வெளிநடப்பு, ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையராகப் பதவி வகித்து வரும் வோல்கர் டர்க் (Volker Türk) அவர்களின் நான்கு ஆண்டு பதவிக்காலத்தை நீட்டிக்கும் தீர்மானத்தைச் சுற்றி உருவான கடுமையான கருத்து வேறுபாட்டின் பின்னணியில் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபை வாக்கெடுப்பில், வோல்கர் டர்க்கின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு 144 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும், 13 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்தன. இந்தத் தீர்மானத்துக்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஜெனீவாவில் உள்ள பிரான்ஸின் ஐ.நா. நிரந்தர தூதரகம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்கா இனி உலகிற்கு வழிகாட்டும் நாடாக இல்லை என்றும், வடகொரியா, நிகராகுவா, மாலி மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடன் ஒரே அணியில் நிற்கிறது என்றும் கடுமையாக விமர்சித்தது.

இந்த கருத்துக்கு பதிலளித்த ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் (Mike Waltz), சமூக வலைத்தளமான எக்ஸ் இல் வெளியிட்ட பதிவில், பிரான்ஸ் தனது கூட்டாளி நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலுக்கு அறிவுரை கூறிக்கொண்டே, உலகின் மோசமான மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் ஆட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் மனித உரிமைகள் தலைவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

இந்த வார்த்தைப் போரின் தொடர்ச்சியாக, ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்பான பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பிரான்ஸ் பிரதிநிதிகள் உரையாற்றத் தொடங்கியவுடன் அமெரிக்க தூதரகக் குழுவினர் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினர்.

வெளிநடப்பிற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய அமெரிக்காவின் மாற்றுப் பிரதிநிதி டான் நெக்ரியா (Dan Negrea), பிரான்ஸ் தனது மட்டம்தட்டும் மற்றும் மரியாதையற்ற அணுகுமுறையை கைவிடும் வரை, அவர்களின் உரையின்போது அமெரிக்க பிரதிநிதிகள் தொடர்ந்து வெளிநடப்பு செய்வார்கள் என்று தெரிவித்தார்.

மறுபுறம், வோல்கர் டர்க் தனது பதவிக்காலத்தில் பாலஸ்தீனப் பகுதிகளிலும் ஈரானிலும் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை வெளிப்படையாக விமர்சித்திருந்தார். இதுவே அவரின் பதவிக்கால நீட்டிப்பை அமெரிக்கா எதிர்ப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.