ஆங்கில கால்வாயில் புலம்பெயர்ந்தோரை கடத்தும் மிகப்பெரிய படகு ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், எகிப்திய குடிமகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த படகில் 173 புலம்பெயர்ந்தோர் பயணம் செய்ததாகவும், அவர்கள் ஒவ்வொருவரிடமும் £1,000 வீதம் வசூலிக்கப்பட்டதால், கடத்தல்காரர்களுக்கு மொத்தம் £173,000 லாபம் கிடைத்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
திங்கட்கிழமை இரவு பிரான்சின் தீப்பே நகருக்கு அருகிலுள்ள வோல்ஸ்-லெஸ்-ரோஸ் கடற்கரையிலிருந்து புறப்பட்ட இந்த படகு, செவ்வாய்க்கிழமை காலை பிரான்ஸ் தேடல் மற்றும் மீட்பு பகுதியில் நெருப்பு பிடித்தது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் கப்பல்கள், இரண்டு இங்கிலாந்து எல்லைப் பாதுகாப்பு கட்டளைக் கப்பல்கள் மற்றும் RNLI லைஃப்போட் ஆகியவை மீட்புப் பணிக்கு துரிதமாக சென்றன.
படகில் இருந்தவர்கள் பௌலோக்-சுர்-மெர் நகரில் கரைக்கு கொண்டு வரப்பட்டனர் என கடலோர பொலிஸ் முகமை தெரிவித்தது. இங்கிலாந்து கப்பல்கள் மூலம் மொத்தம் 54 புலம்பெயர்ந்தோர் பிரான்சுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என இங்கிலாந்து அரசு உறுதிப்படுத்தியது. இருப்பினும், 11 பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் மூவர் பிரான்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
173 பேருடன் சென்ற இந்த படகு, ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற ஒற்றை படகில் சென்றவர்களின் எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளது. இது, கடந்த மாதம் 165 புலம்பெயர்ந்தோருடன் சென்ற 13 மீட்டர் நீள படகின் சாதனையை முறியடித்துள்ளது.
கடத்தல் சம்பவம் குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், மீட்புக் கப்பல்களில் ஏறுமாறு புலம்பெயர்ந்தோரை கட்டாயப்படுத்த முடிவு எடுக்கப்படவில்லை என்றும், அது அவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறினர்.
பிரான்ஸ் அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், எல்லைப் பாதுகாப்பு கட்டளைக்கு கால்வாயில் ஆபத்தான நிலையில் இருந்த படுகைப் பற்றிய தகவல் கிடைத்ததாகவும், இங்கிலாந்து கப்பல்கள் பிரான்ஸ் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவியதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் சிறு படகு கடல்கடத்தல்களின் கொடூர அபாயத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும், இந்த ஆபத்தான பயணங்களைத் தடுக்க பிரான்ஸ் மற்றும் வெளிநாட்டு கூட்டாளர்களுடன் தொடர்ந்து உழைப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த விபத்து, ரிஃபார்ம் UK கட்சி ‘ஆபரேஷன் ஃபோர்ட்ரஸ்’ என்ற திட்டத்தின் கீழ், புலம்பெயர்ந்தோரை பிரான்ஸ் அல்லது பெல்ஜியத்துக்கு திருப்பி அனுப்ப ராயல் நேவியை பயன்படுத்த முன்மொழிந்த ஒரு நாளில் நிகழ்ந்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர், இந்த சம்பவம் தங்களின் திட்டம் செயல்படக்கூடியது என்பதை நிரூபிப்பதாகவும், இங்கிலாந்து கப்பல்கள் மனிதாபிமான பணியின் ஒரு பகுதியாக சர்வதேச சட்டத்தை மீறாமல் புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கு திருப்பி அனுப்ப முடியும் என்பதை உறுதிப்படுத்துவதாகவும் கூறினார்.