Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா 47 ஆண்டுகளை கடந்த அபூர்வ ராகங்கள் | ரஜினியின் நீங்கா நினைவுகள்

47 ஆண்டுகளை கடந்த அபூர்வ ராகங்கள் | ரஜினியின் நீங்கா நினைவுகள்

8 minutes read

சென்னையில் உள்ள பிலிம்சேம்பர் வளாகத்தில் நடிப்பு, டைரக்ஷன், எடிட்டிங், ஒளிப்பதிவு முதலியவற்றில் பயிற்சி பெற, விண்ணப்பம் அனுப்பலாம் என்று பத்திரிகையில் விளம்பரம் வந்ததைக் கண்டு, அதற்கு ரஜினி விண்ணப்பித்தார்.

நேர்காணலில் தேர்வு செய்யும் அதிகாரிகளைக் கவர்ந்த ரஜினி, நடிப்பு பயிற்சி பெறும் வாய்ப்பை பெற்றார்.

அந்நேரத்தில் அவர் வேலை பார்த்துக்கொண்டிருந்த பேருந்து நடத்துனர் வேலைக்கு நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு நடிப்பு பயிற்சி பெற்றார்.

சென்னை, அமிஞ்சிகரையில் தங்கி தினமும் அண்ணாசாலையில் உள்ள பயிற்சி நிலையத்திற்கு பேருந்தில் சென்ற ரஜினி, சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும், எப்படி வசனம் பேச வேண்டும் என்றெல்லாம் அங்கு பயிற்சி பெற்றார். அவருடன் 36 மாணவர்கள் பயிற்சிபெற்றனர்.
அங்கு, உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களை பார்க்கிற வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

சினிமா உலகைச் சேர்ந்த நடிகர் – நடிகைகள், டைரக்டர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அடிக்கடி பயிற்சி நிலையத்திற்கு வந்து கலந்துரையாடுவார்கள்.

இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார்கள்.

இயக்குநர் கே.பாலசந்தர் வருகை

அப்படி ஒருமுறை இயக்குநர் கே.பாலசந்தர் வருகை தந்து, மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது ரஜினியும் அவரிடம் கேள்வி எழுப்பினார். “ஒரு நடிகனிடம் அவன் நடிப்பைத் தவிர வேறு எதை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?” என்று ஆங்கிலத்தில் வேகமாகக் கேட்டதால், கே.பாலசந்தருக்கு புரியவில்லை.

பிறகு நிறுத்தி – நிதானமாக மீண்டும் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்.

பாலசந்தர் சிரித்துக்கொண்டே, “நடிகன் வெளியே நடிக்கக்கூடாது” என்று கூறியாவர், உன் பெயர் என்ன என்று கேட்டிருக்கிறார்.
“சிவாஜிராவ்” என்று பதில் சொல்லி இருக்கிறார், ரஜினி.

நிகழ்ச்சி முடிந்து புறப்பட்ட பாலசந்தர், ரஜினியுடன் கை குலுக்கி இருக்கிறார்.

அப்போது ரஜினியின் பயிற்சி ஆசிரியர் பாலசந்தர் அருகே வந்து “இவனுக்கு உங்க படங்களை ரொம்பப் பிடிக்கும் “சார் ! உங்கப்படம் என்றால் இவனுக்கு உயிர். அவள் ஒரு தொடர் கதை படத்தை ஆறு தடவை பார்த்திருக்கிறான்!” என்று பாலசந்தரிடம் கூறி இருக்கிறார்.

பாலசந்தர் சிரித்தபடி, “உனக்கு தமிழ் தெரியுமா?” என்று ரஜினியிடம் கேட்க, “கொஞ்சம் கொஞ்சம் தெரியும்” என்று ரஜினி சொல்லி இருக்கிறார்.

“உனக்குத் தமிழ் தெரியாது என்பது உன் பேச்சில் இருந்தே தெரிகிறது!” என்று சொன்ன பாலசந்தர், பிறகு, “நான் வருகிறேன்” என்று விடைபெற்றுக்கொண்டு ஆசிரியருடன் கார் வரை பேசிக் கொண்டே சென்றார்.

கே.பாலசந்தர் சென்ற பிறகு, திரும்பி வந்த ஆசிரியர், “பாலசந்தர் சார் உன்னை பார்க்க விரும்புகிறார். நீ போய் அவரை ஒரு நாள் அவருடைய ஆபிசில் பாரு” என்று கூறி இருக்கிறார்.

ரஜினிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பாலசந்தர் சார் நம்மை பார்க்க விரும்புகிறார்? பட சான்ஸ் தேடி வருகிறது என்று நெகிழ்ந்து போனார்.

வேலை இழப்பு

ஆனால், ஊரில் இருந்து ரஜினிக்கு ஒரு கடிதம் வந்தது. “உடனே புறப்பட்டு வா!” என்று அதில் அவர் அண்ணன் எழுதியிருந்தார்.

இரண்டு வருடங்களுக்கு மேலாக விடுமுறையில் இருந்ததால், மேற்கொண்டு அனுமதிக்க முடியாது என்று உன்னை கண்டக்டர் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்து விட்டார்கள் என்கிற தகவல் கிடைத்தது.

பஸ் டெப்போவுக்கு சென்ற போது, அங்கிருந்தவர்கள் ரஜினியை பரிதாபமாகப் பார்த்தார்கள். “கவலைப்படாதே. நீ பெற்ற நடிப்பு பயிற்சி, உன்னை கைவிட்டு விடாது” என்று நண்பர் புட்ராஜ் ஆறுதல் கூறி இருக்கிறார்.

முன்பு ரஜினியை புகழ்ந்து பேசியவர்கள் இப்போது, “நடிகனாக வேண்டும் என்று மெட்ராஸ் போனான். இவன் மூஞ்சிக்கு நடிகனாக முடியுமா? யார் – யார் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருக்கணும்!” என்று ரஜினியின் காதுபடவே பேசினார்கள்.

ரஜினி அப்போது ஒரு உறுதியான முடிவை எடுத்தார். நடிகனாகாமல் இனி பெங்களூருக்குத் திரும்பக்கூடாது!’ என்று. அன்று இரவே சென்னைக்கு ரெயில் ஏறினார்.

திரைப்பட பயிற்சி பெற்றால் தேடி வந்து வாய்ப்பு தரமாட்டார்கள். நாம் தான் சினிமா உலகை தேடிப் போக வேண்டும் என்று படக் கம்பெனிகளுக்கு செல்ல முடிவு செய்தார்.

அவசர அழைப்பு

ஒரு நாள் மாலை ஐந்து மணி அளவில் நண்பன் சதீஸ் ஒடி வந்து, “சிவாஜி! பாலசந்தர் சார் ஆபீசில் இருந்து, அசோசியேட் டைரக்டர் சர்மா வந்திருக்கிறார். பாலசந்தர் சார், உன்னை உடனே அழைத்து வரச் சொன்னாராம்!” என்று கூறி இருக்கிறார்.

கே.பாலசந்தரின் அலுவலகத்தில் அவரை சந்தித்த ரஜினி, அவர் முன் அமர தயங்கி இருக்கிறார். என்ன படிச்சிருக்கீங்க?’ என்று பாலசந்தர் கேட்டிருக்கிறார்.

`எஸ்.எஸ்.எல்.சி. பாஸ்!” என்றதும், `நான் இதுவரை உங்கள் நடிப்பைப் பார்த்ததில்லை. ஏதாவது நடித்துக் காட்டுங்கள்!’ என்று கூறி இருக்கிறார்.

`எனக்குத் தமிழ் தெரியாதே!’ என்று ரஜினி சொன்னதும், பரவாயில்லை.

கன்னடத்தில் பண்ணுங்க!’ என்று பாலசந்தர் கூறி இருக்கிறார்.

கிரீஷ்கர்னாட் எழுதிய “துக்ளக்” நாடகத்தில் இருந்து ஒரு காட்சியை நடித்துக் காட்டி இருக்கிறார், ரஜினி.

பாலசந்தருக்கு பிடித்திருந்தது. `ரொம்ப நல்லா இருக்கு’ என்று பாராட்டி இருக்கிறார்.

`இப்போது, அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு ரோல். அது சின்ன ரோல் என்றாலும், ரொம்ப பவர்புல் ரோல். அந்த ரோலில் உங்களை அறிமுகம் செய்யப்போகிறேன்.

அடுத்து, `அவள் ஒரு தொடர்கதை’ படத்தை தெலுங்கில் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

தமிழில் ஜெய்கணேஷ் நடித்த ரோல் உங்களுக்கு!” என்று சொன்ன பாலசந்தர், “உங்களுக்கு தெலுங்கு தெரியுமா?” என்று கேட்டிருக்கிறார்.

தெலுங்கில் சில வார்த்தைகள்தான் தெரியும் என்றதும், “மூன்றாவது ஒரு கதை இருக்கு. அதில் ஆண்டி ஹீரோ ரோலை உங்களுக்குக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்” என்று கூறிவிட்டு, “நீங்கள் மட்டும் தமிழை நன்றாகக் கற்றுக் கொண்டால், உங்களை எங்கேயோ கொண்டு போய் விட்டு விடுவேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

3 படங்களில் நடிக்க வைக்கப் போவதாக இயக்குநர் கே.பாலசந்தர் கூறியதால் மகிழ்ச்சியின் உச்சிக்குச் சென்ற ரஜினிகாந்த், நேராக டிரைவ்-இன்-உட்லண்ட்ஸ் ஓட்டலுக்குச் சென்று நண்பர்களுக்கு சுவிட், மசாலா தோசை, காபி வாங்கிக் கொடுத்து கொண்டாடி இருக்கிறார்.

“அபூர்வ ராகங்கள் படத்தின் ஷூட்டிங் நாளைக்கு நடக்கிறது. உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை பாலசந்தர் எடுக்கப்போகிறார்.

ஸ்டூடியோவுக்கு வந்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

அவர்கள் சொன்னபடியே ரஜினி ஸ்டூடியோவுக்கு சென்றார். ஆனால், அன்று அவரது காட்சிகள் எடுக்கப்படவில்லை. மறுநாளும் போனார். அன்றும், அதற்கு அடுத்த நாளும் கூட அவருக்கு படப்பிடிப்பு இல்லை.

நான்காவது நாள் நடந்த முதல் காட்சி

நான்காவது நாள் அவருக்கான காட்சிகளை படமாக்கினார் பாலசந்தர்.
ஒரு பெரிய பங்களா. அதற்கு ஒரு பெரிய கதவு. அதைத் திறந்துகொண்டு, தாடி-மீசையுடன் உள்ளே நுழைகிறார், ரஜினி.

“பைரவி வீடு இதுதானா? நான் பைரவியோட புருஷன்!” என்று கமலஹாசனிடம் கூறுகிறார். ரஜினி பேசிய முதல் வசனம் இதுதான்.

படப்பிடிப்புக்கு முன், இந்த வசனத்தை பல தடவை பேசிப் பேசி ஒத்திகை பார்த்திருந்தார், ரஜினி.

“கிளாப்!” என்று இயக்குநர் கூறியதும், பதற்றத்தில் வசனத்தை உளறி இருக்கிறார், ரஜினி. தான் அவ்வளவு சரியா செய்யவில்லை என்பதை, பாலசந்தர் முகத்திலிருந்து தெரிந்து கொண்ட ரஜினி, அடுத்த ஷாட்டில் பாராட்டும் படி நடித்திருக்கிறார்.

அபூர்வராகங்கள் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தனது காட்சிகளுக்கு டப்பிங் பேச சென்ற ரஜினி, ஜெமினி ஸ்டூடியோவில் அப்போது கமலஹாசனும், ஸ்ரீவித்யாவும் `டப்பிங்’ பேசிக் கொண்டிருபாதை கண்டு, தன்னுடைய காட்சி எப்போது வரும் என்று காத்திருந்தார்.

திடீரென்று திரையில் ஒரு காட்சி. கோட்டு போட்ட ஒரு தாடி ஆசாமி, கதவைத் திறந்து கொண்டு வருகிறான். ஏதோ பேசுகிறான். ரஜினியால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்புறம்தான் தெரிந்தது – அது தான்தான் என்று! தன்னை மறந்து, அந்தக் காட்சியைப் பார்த்திருக்கிறார்.

மெய்சிலிர்த்த ரஜினி

தன் உருவத்தை திரையில் பார்த்தபோது உடம்பெல்லாம் சிலிர்த்துப் போக நின்று கொண்டிருந்த ரஜினியை கவனித்த கே.பாலசந்தர், “என்ன! சிவாஜி டப்பிங் போகலாமா என்று கேட்டிருக்கிறார்.

ரஜினிக்கு தமிழ் சரிவரத் தெரியாததால், வேறு யாரையாவது அவருக்கு குரல் கொடுக்கச் சொல்லலாம் என்று சிலர் கூறினார்கள். பாலசந்தர் அதை ஏற்கவில்லை. `கூடவே கூடாது. ஒரிஜினல் வாய்ஸ்தான் வேண்டும்’ என்று கூறி ரஜினிய பேச அழைத்திருந்தார்.

ரஜினி முதல் முறையாக டப்பிங் பேசினார். எப்படி உச்சரிக்க வேண்டும் என்று பாலசந்தர், சொல்லிக் கொடுத்தார். அதை அப்படியே வாங்கி பேசினார் ரஜினி.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்கிற புகழ் பெற்ற நடிகர் இருப்பதால், சிவாஜி என்ற பெயர் உனக்கு வேண்டாம். `ராவ்’ என்கிற பெயரும், தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது.

`டைட்டிலில் எப்படி பெயர் போட வேண்டும் என்று பாலசந்தர் கேட்ட போது, நண்பர்களை கலந்து கொண்டு, `சரத்’, `ஆர்.எஸ்.கெய்க்வாட்’ என்ற இரண்டு பெயர்களை தெரிவித்திருக்கிறார்.

நண்பர்களுக்கு அந்த பெயர்கள் பிடிக்கவில்லை. அதனால், “நீங்களே ஆசீர்வாதம் செய்து, ஒரு பெயர் வையுங்க!” என்று ரஜினி கூறி இருக்கிறார்.

“என்னுடைய மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில், சந்திரகாந்துக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் ஸ்ரீகாந்த், மற்றவன் ரஜினிகாந்த். ஸ்ரீகாந்த் என்ற பெயரை ஏற்கனவே ஒருவருக்கு வைத்தாகிவிட்டது.

ரஜினிகாந்த் என்ற பெயரை யாருக்கு வைக்கலாம் என்று ரொம்ப நாளா நினைத்துக் கொண்டிருந்தேன். அதை உனக்கு வைக்கிறேன். என்று கூறியவர், ரஜினிகாந்த் என்று கூறியதும், ரஜினி, பாலசந்தரின் காலைத் தொட்டுக் கும்பிட, நல்ல வரணும் என்று வாழ்த்தி இருக்கிறார்.

அபூர்வ ராகங்கள் ரிலீஸ் ! 

1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி அபூர்வராகங்கள் படம் வெளியானது. தான் நடித்த அந்த முதல் படத்தைப் பார்க்க ரஜினி தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டருக்குத்தான் சென்றார்.

ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. பிறகு தியேட்டர் மானேஜரை சந்தித்து, தான் இந்தப் படத்தில் நடித்திருப்பதை தெரிவித்து அவரிடம் டிக்கெட் பெற்று அபூர்வராகங்கள் படத்தைப் பார்த்திருக்கிறார், ரஜினி.

படம் மிகச் சிறப்பாக அமைந்திருந்ததால், நூறு நாட்களைக் கடந்து அபூர்வ ராகங்கள் படம் ஓடியது. முதல் படமே நூறு நாள் படமாக அமைந்தது ரஜினிக்கு பெருமையாக இருந்தது.

இன்று அபூர்வ ராகங்கள் வெளியாகி 47 ஆண்டுகள் கடந்து விட்டது.

இன்றும் என்றும் அந்நினைவுகளுடன் ரஜினியும் சூப்பர் ஸ்டாராக சினிமா உலகில் கோலாச்சிக்கொண்டிருக்கிறார்.

நன்றி : in4net.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More