இலண்டன் – சவுத்எண்ட் விமான நிலைய ஓடுபாதையில் நெதர்லாந்தின் சிறிய விமானம் ஒன்று, ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தாதி ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
முன்னதாக குறித்த விமானத்தில் பயணித்தவர்களில் தகவல் சரியாக உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையிலேயே, 31 வயதான மரியா பெர்னாண்டா ரோஜாஸ் ஓர்டிஸ் எனும் தாதி, “விமான செவிலியராக” தனது முதல் நாள் பணியில் இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்தி : இலண்டன் சவுத்எண்ட் விமான நிலைய ஓடுபாதையில் விமானம் விபத்து
மரியா பெர்னாண்டா, சிலியில் பிறந்த ஒரு ஜெர்மன் பிரஜை ஆவார். அவர் முன்னதாக பொதுத்துறையில் தாதியாகப் பணிபுரிந்துள்ளார்.
அத்துடன், B200 Super King Air என்ற குறித்த விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்ததில் உயிரிழந்த நான்கு பேரில் ஒரு டச்சு விமானி மற்றும் துணை விமானியும் அடங்குவர் என பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விமானம், நெதர்லாந்தில் உள்ள லெலிஸ்டாட் விமான நிலையத்தை தளமாகக் கொண்ட மருத்துவ வெளியேற்றங்களில் நிபுணத்துவம் பெற்ற ஜீஷ் ஏவியேஷன் நிறுவனத்தால் இயக்கப்பட்டது.
மேலும், அது “விசாரணையில் அதிகாரிகளுக்கு தீவிரமாக ஆதரவளிப்பதாக” உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்த நால்வரின் பெயர்கள் சவுத்எண்ட் அதிகாரிகளால் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
பிரதமரின் இரங்கல் செய்தி
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், தனது X தளத்தில் ஒரு இரங்கல் செய்தியைப் பதிவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
“சவுத்எண்ட் விமான நிலையத்தில் நடந்த விமான விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது மிகவும் துயரமான செய்தி. எனது எண்ணங்கள் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் உள்ளன. சம்பவ இடத்தில் இருந்த அனைத்து அவசர உதவியாளர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.