இங்கிலாந்தில் வேலையின்மை விகிதம் எதிர்பாராத விதமாக 5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதான மூன்று மாதங்களில் இது 4.9 சதவீதமாக இருந்ததுள்ளது.
16 முதல் 24 வயது இளைஞர்களிடையே வேலையின்மை விகிதம் 14.7 சதவீதத்தை எட்டியுள்ளது. இது 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிகமான அளவாகும். தற்போதைய இந்தச் சரிவு 2008 நிதி நெருக்கடி மற்றும் கொவிட்19 தொற்றுக் காலத்தின் சரிவுக்கு நிகராக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தில் வெற்றிடப் பணியிடங்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 705,000ஆகக் குறைந்துள்ளது. குறிப்பாக சில்லறை விற்பனைத் துறைகளில் அதிக சரிவு ஏற்பட்டுள்ளது.
ஈரான் போரின் ஆரம்பகட்ட தாக்கம் வணிக நிறுவனங்களை பாதிக்கத் தொடங்கியுள்ளதே இந்த வேலையின்மை உயர்வுக்கு முதன்மைக் காரணமாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
போர் நீடிக்கும் பட்சத்தில் தொழிலாளர்களுக்கான தேவை மேலும் குறையக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் செலவுகள் அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு வரி மாற்றங்கள் காரணமாக நிறுவனங்கள் புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதை நிறுத்தி வைத்துள்ளன. ஊதிய உயர்வு 3.4 சதவீதமாகக் குறைந்துள்ள நிலையில், பணவீக்கம் காரணமாக குடும்பங்களின் செலவு செய்யும் திறன் குறைய வாய்ப்புள்ளது.
பணவீக்க அச்சம் மற்றும் போர்ச் சூழல் காரணமாக, Bank of England வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு உயர்வாகவே பராமரிக்க நேரிடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அரசு தரப்பில், ஈரான் போர் வேலைவாய்ப்புச் சந்தையில் ஒரு நிழலை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, வரி உயர்வுகள் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களைப் பாதிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.