October 2, 2023 8:21 am

வனநீலி | தேன்மொழி தாஸ்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email


உதிரவாசனை உட்பெருகும் காட்டில்
நிதம்ப உருக்கொண்டு பூக்களும்
தியானம் செய்கின்றன
வெட்டுப்பட்ட மரப்பட்டைகளுக்கு இடையே பதறும் முகங்கொண்ட மூதாதையர்கள் புலம்புகிறார்கள்
மலைக்குகைகளெங்கும் பாறைகள்
மனித உணர்வுகளிலே
சித்திர சுருபங்களாகி வளருகின்றன
திசையெல்லாம் காண்பதாய் மரச்சதையெங்கும் கண்கள் முளைக்க
நிற்கும் பெருங்கிளைகள்
இசையெல்லாம் கேட்பதாய் காதுகளாகவே சாயும் பள்ளத்தாக்குகள்
பெண்ணின் கருணைதான்
மக்கிப்போன யாவற்றிலும் கூட செயலாகிறது
இயற்கை பெண்

வனநீலி துடிகொள்கிறாள்
உடல்வேண்டி உடல்வேண்டி
இரத்த தாகம் எடுத்தால்
என் அகம்கொய்து அகம்கொய்தே
உயிர்ச்சங்கு படைப்பேன்
தாய் ~நிதம்தின்று – நிதம்உண்டு
உலகு காண் என்று துடிப்பேன்
எதிலும் உயிர்கண்டு உயிர்கொண்டு
என் உளச்சாரல் பிடித்தால்
அறம்கொண்டு அறம்வென்று
நயம்யாவும் அருள்வேன்
என்று பாடிச்செல்கிறாள்

மலையூற்று அவள் கண்ணீர்
அதில் பெருகுவதெல்லாம்

நம்பா நெஞ்சத்து மக்களுக்கும்
மரகதமலை மார்பே மொழியும் அமுதும்
என்பதுவே !

தேன்மொழி தாஸ்

6.1.2021
3:31 am

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்